கிழக்கில் கவனம் செலுத்தும் ரஷ்யா.. உக்ரைன் தெருக்களில் சிதறி கிடக்கும் சடலங்கள்.. வலுக்கும் கண்டனம்!
கீவ் : உக்ரேனில் போர் தொடுத்துள்ள ரஷ்யா தற்போது அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளை கைப்பற்ற கவனம் செலுத்தி வருவதாக நேட்டோ கூறியுள்ள நிலையில், உக்ரைனின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள தெருக்களில் சடலங்கள் சிதறிக்கிடக்கின்றன என அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் கூறியுள்ளார்.
Recommended Video
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து சுமார் 41 நாட்கள் ஆகியுள்ள நிலையில் அந்நாட்டின் தலைநகரை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது ரஷ்ய ராணுவம்.
ஆனால் அதனை உக்ரைன் ராணுவம் தடுத்து வரும் நிலையில், மரியுபோல், புச்சா உள்ளிட்ட பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது, ஆனாலும் மீண்டும் உக்ரைன் நகரங்களை ரஷ்யாவிடமிருந்து மீட்டு வருகிறது.

உக்ரைன் போர்
உக்ரைன் நாட்டில் நாளுக்கு நாள் போர் தீவிரமாகி வரும் நிலையில், போரின் காரணமாக பல மில்லியன் மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடான போலந்து உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதுவரை போரில் பல பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள், பெண்கள் குறிப்பாக 150 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது.

உலக நாடுகள் கண்டனம்
மேலும் ரஷ்யா திட்டமிட்டு மக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், போர் குற்றங்கள் மற்றும் திட்டமிட்ட இனப்படுகொலை நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி வருகிறார். குறிப்பாக புச்சா நகரில் பொதுமக்களை கைகளை கட்டி சுட்டுக் கொன்றதாகவும் , சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, கைகளில் ரஷ்ய ராணுவத்தினர் முன் வைத்துள்ள நிலையில் ரஷ்யாவுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

போர்குற்ற விசாரணை
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு போர்குற்றவாளி எனவும், ரஷ்யாவும் அத்துமீறல்களுக்கு எதிராக போர்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும், ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று வலியுறுத்தியிருந்த நிலையில், ரஷ்யா இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அதே நேரத்தில் உக்ரைன் திட்டமிட்டு இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

ஐநாவில் ஜெலன்ஸ்கி உரை
இந்நிலையில் உக்ரைனின் கிழக்குப் பகுதிகளை கைப்பற்ற ரஷ்ய ராணுவத்தினர் திட்டமிட்டு வருவதாக நேட்டோ கூறியுள்ளது. அந்த பகுதிகளில் அதிக அளவில் ராணுவம் மற்றும் ஆயுதங்களை குவித்து வருவதாகவும், இதனை நேட்டோ உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்ற உள்ளார்.












Click it and Unblock the Notifications