அல் கொய்தாவுக்கு புது ஜெனரல் மேனேஜர்: மாத்தி யோசிப்பாரா ஜவாஹிரி?
இஸ்லாமாபாத்: அரபிய தீபகர்ப பகுதியின் அல் கொய்தா தலைவர் நசிர் அல் வஹாய்ஷி இறந்தது அந்த அமைப்புக்கு பேரடியாக உள்ளது. நசிருக்கு பதில் வேறு ஒரு தலைவரை நியமிக்கும் பணி நடந்து வருகிறது.
அரபிய தீபகர்ப பகுதியின் பொது மேலாளராக(ஜெனரல் மேனேஜர்) இருந்தவர் நசிர் அல் வஹாய்ஷி. அல் கொய்தாவில் பொது மேலாளர் பதவி மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். இந்நிலையில் நசிர் இறந்துவிட்டதால் அவருக்கு பதில் அபு முகமது அல் ஜூலானியை புதிய பொது மேலாளர் ஆக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலானி பதவியேற்கும் வரை பொது மேலாளர் பதவியை அல் கொய்தா அமைப்பின் அனைத்து பிராந்திய தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி வகிப்பார்.
சிரியாவில் உள்ள அல்கொய்தா அமைப்பின் கிளையான ஜப்ரத் அல் நுஸ்ராவின் தலைவராக உள்ளவர் அபு முகமது அல் ஜூலானி. அவர் தலைமையில் சிரியாவில் அந்த அமைப்பினர் போராடி வருகிறார்கள். ஜூலானிக்கு அல் கொய்தா பொது மேலாளர் பதவியை அளித்தால் அவரை அல்கொய்தாவினர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அல் கொய்தா இன்றும் இருப்பதற்கு காரணம் அது ஏமனில் வெற்றிகரமாக நடத்திய பிரச்சாரம் தான். ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் அல் கொய்தா அமைப்பு தனது வலிமையை இழந்தது. ஆனால் ஏமனில் இன்றும் அந்த அமைப்பு சக்திவாய்ந்ததாக உள்ளது. ஏமனுக்குள் இன்னும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நுழையவில்லை. அவர்களை நுழையவிடாமல் தடுக்க நினைக்கிறது அல் கொய்தா.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்த சரியான ஆள் ஜூலானி தான் என கூறப்படுகிறது. அரபிய தீபகர்ப பகுதியில் உள்ள உள்நாட்டு அமைப்புகளுக்கு முக்கியத்தும் அளிக்க அல் கொய்தா முடிவு செய்துள்ளது.
முன்னதாக ஆப்கானிஸ்தானில் உள்ள உள்நாட்டு அமைப்புகளை கண்டுகொள்ளாததால் தான் அங்கு அல் கொய்தாவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. வழக்கமாக அல் கொய்தா அமைப்பில் முக்கிய பொறுப்புக்கு அமைப்பு உறுப்பினர்களில் ஒருவர் தான் நியமிக்கப்படுவார். இந்நிலையில் தான் வேறு ஒரு அமைப்பின் தலைவரான ஜூலானி பொது மேலாளராக நியமிக்கப்படுகிறார்.
வழக்கத்தை மாற்றி வேற்று அமைப்பின் தலைவரை ஜவாஹிரி பொது மேலாளராக நியமிப்பாரா?. அரபிய தீபகர்ப பகுதியில் தாக்குப்பிடிக்க வேண்டும் எனில் ஜவாஹிரி மாற்றி யோசிக்க வேண்டும்.