வட கொரியா மீதான தடைகளை இறுக்க அமெரிக்க திட்டம்
வட கொரியா மேற்கொண்டு வரும் அணு மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அதற்கு அழுத்தம் தர ராஜ்ஜிய ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும், தடைகளை மேலும் இறுக்கவும் அமெரிக்க திட்டமிட்டுள்ளது.
செனட் சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட ஒரு சிறப்புக்கூட்டத்துக்குப் பின், வட கொரியாவுக்கு எதிரான அதிபர் டொனால்ட் டிரம்பின் வியூகம் அறிவிக்கப்பட்டது.
முன்னர், பசிஃபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த மூத்த தளபதி, தென் கொரியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பட்ட ஏவுகணை பாதுகாப்பு அமைப்புமுறையை நியாயப்படுத்தி பேசியிருந்தார்.
வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னை மண்டியிட வைக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பவில்லை என்றும், மாறாக அவரை நிதானத்துக்கு கொண்டுவரவேண்டும் என்றே விரும்புவதாகவும் ஆயுத சேவைகள் குழுவிடம் பசிஃபிக் பிராந்திய கட்டுப்பாட்டு தலைவர் ஹாரி ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் யாங் யீ, அமெரிக்கா - தென்கொரியா இடையேயான போர் விளையாட்டுகளை முடிவுக்கு கொண்டு வரவும், அந்தப்பகுதியில் பதற்றத்தை குறைக்க வட கொரியாவின் அணு மேம்பாட்டு திட்டத்தை நிறுத்தக்கோரியும் வலியுறுத்தியுள்ளார்.
பதற்றமான சூழல் அதிகரித்துள்ள நிலையில் புதிய ஆயுத சோதனைகளில் வட கொரியா ஈடுபடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
''கொரிய தீபகற்பத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் அணுஆயுதமில்லாத அமைதியை அமெரிக்க எதிர்பார்ப்பதாக,'' அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன், பாதுகாப்புத்துறை செயலர் ஜிம் மேட்டிஸ் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் டேன் கோட்ஸ் ஆகியோர் விடுத்த கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.