மூச்சுவிட முடியல.. வடகொரியா மக்களுக்கு புது பிரச்சனை.. அதிர்ச்சியில் கிம் ஜாங் உன்..5 நாள் ஊரடங்கு!
வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் மக்கள் ஜலதோசம் உள்ளிட்ட அறிகுறியுடன் மூச்சுவிட முடியாமல் தவித்து வரும் நிலையில் 5 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சியோல்: மர்மதேசமாக உள்ள வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் திடீரென 5 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரையிலான 5 நாட்கள் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இல்லாத நிலையில் சுவாசம் தொடர்பான பிரச்சனையால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பாதிப்பை உருவாக்கிய கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவியது. இந்தியா உள்பட ஏறக்குறைய 150க்கும் அதிக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2020, 2021 காலக்கட்டத்தில் ஏறக்கறைய அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

மர்மதேசம் வடகொரியா
கொரோனா பரவல் தொடர்பாக பல நாடுகள் உண்மையை கூறினால் சீனா உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்புகள், பலி தொடர்பாக உண்மையான அம்சங்களை வெளியிடவில்லை. இதில் ஒரு நாடு தான் மர்மதேசமான வடகொரியா. 2020, 2021 காலக்கட்டத்தில் ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி தவித்தபோது எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என வடகொரியா தெரிவித்தது. சீனாவின் அண்டை நாடாக வடகொரியா உள்ள நிலையில் அந்த நாட்டின் அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

வடகொரியாவில் திடீர் ஊரடங்கு
இருப்பினும் கூட கடந்த ஆண்டு மத்தியில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடக செய்திகள் தெரிவித்தன. இருப்பினும் ஆகஸ்ட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்துள்ளது. இதனால் பல நாடுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் திடீரென்று தற்போது வடகொரியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

5 நாள் ஊரடங்கு
வடகொரியா நாட்டின் தலைநகரான பியாங்யாங்கில் இன்று முதல் 5 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அங்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் உண்மை நிலை என்பது அதுவல்ல. மாறாக 5 நாள் ஊரடங்கின் பின்னணியில் இன்னொரு பிரச்சனை உள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வடகொரியாவின் செய்தி நிறுவனமான என்கே நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஊரடங்கிற்கான காரணம் தெரிவிக்கப்பட்டது.

காரணம் என்ன?
அதாவது பியாங்யாங் நகரில் வசிக்கும் மக்கள் தற்போது புதிய வகை சுவாச பிரச்சனையை சந்திக்கின்றனராம். ஜலதோஷம் உள்ளிட்ட அறிகுறியுடன் துவங்கும் இந்த பிரச்சனை மக்களுக்கு துன்பத்தை விளைவித்து வருகிறதாம். இதனை கட்டுப்படுத்தும் வகையில் பியாங்யாங்கில் 5 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தினமும் உடல் வெப்பநிலையை அளவீட்டு அறிக்கையாக தயாரித்து ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் கிம் ஜாங் உன் அறிவுரை..
மேலும் மக்கள் எதிர்கொள்ளும் சுவாச பிரச்சனையால் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த பிரச்சனைக்கான காரணம் குறித்து அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சரியான காரணம் இன்னும் புலப்படாத நிலையில் தான் இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பியாங்யாங்கில் 5 நாள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications