ஆர்லான்டோ பயங்கரம்: உமர்... மனைவியை மதிக்காதவர், அடித்து உதைப்பவர்!
ஆர்லான்டோ: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லான்டோ நகரில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்க மக்களை உலுக்கியுள்ளது. இதை தீவிரவாத தாக்குதல் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரின் பெயர் உமர் மாட்டீன். இவரை பின்னர் போலீஸார் சுட்டுக் கொன்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தெரிவித்து விட்டே செய்துள்ளார் உமர் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
போலீஸாருக்குத் தகவல் தெரிவித்த 3 மணி நேரத்திற்குள் எல்லாமே நடந்து முடிந்து விட்டது. இந்த நிலையில் உமர் குறித்து அவரது முன்னாள் மனைவி சித்தோரா யூசப்பியும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஒரு நல்ல கணவராக இருந்ததில்லை. எப்போது பார்த்தாலும் என்னை அடித்து உதைப்பார். திட்டுவார், துன்புறுத்துவார். அவர் நிலையான மனிதராக இல்லை என்று சித்தோரா கூறியுள்ளார்.
30 பேரின் உயிரிழக்குக் காரணமான உமருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் நேரடித் தொடர்பு உள்ளதா என்று தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸுக்குத் தெரிவித்து விட்டு
உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 2 மணிக்கு 911 அவசர சேவை தொலைபேசியை அழைத்து நகரில் உள்ள ஒரு முன்னணி ஓரினச்சேர்க்கையாளர் பாரில் தாக்குதல் நடத்தப் போவதாக கூறியுள்ளார் உமர். தனது பெயரையும், தான் இருக்கும் இடத்தையும் கூட அவர் கூறியுள்ளார். மேலும் தான் ஐஎஸ் அமைப்பை பின்பற்றுபவர் என்றும் கூறியுள்ளார்.
5 மணிக்கு எல்லாம் முடிந்தது
5 மணிக்கு எல்லாம் முடிந்து விட்டிருந்தது. 5 மணியளவில் உமர் மரணச் செய்தியை போலீஸார் அறிவித்தனர். அவரது உடலும் மீட்கப்பட்டது. அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குக் காரணமான உமர் கடைசியில் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாகி விட்டார்.
தனி நபர் தீவிரவாதம்
உமருக்கு நேரடியாக ஐஎஸ் தீவிரவாதிகளுடனோ அல்லது அமைப்புடனோ தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு தனி நபர் தீவிரவாதியாக மாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஓரினச்சேர்க்கை எதிர்ப்பாளர்
இவரது குடும்பத்தினரிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது உமருக்கு ஓரினச் சேர்க்கையாளர்களைக் கண்டாலே பிடிக்காதாம். எனவே அவர்களைக் குறி வைத்தே உமர் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. உமர் இதற்கு முன்பு எந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர் இல்லையாம்.
2 முறை கண்காணிக்கப்பட்டவர்
அதேசமயம், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐயின் கண்காணிப்பில் இவர் 2 முறை வைக்கப்பட்டுள்ளார். ஒருமுறை இஸ்லாமிய அமைப்புகளுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக கூறியபோது கண்காணிக்கப்பட்டார். அடுத்து, சிரியாவுக்குச் சென்று தற்கொலைப் படைத் தீவிரவாதியாக மாறிய புளோரிடா நபருடன் தனக்குத் தொடர்புள்ளதாக கூறியபோது கண்காணிக்கப்பட்டார். ஆனால் இரண்டு முறையும் இவர் விடுவிக்கப்பட்டு விட்டார்.
சட்டப்பூர்வமான துப்பாக்கிகள்
உமர் 2 துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்தார். இரண்டுமே உரிய அனுமதியுடன் கூடிய சட்டப்பூர்வமான துப்பாக்கிகள்தான். அவர் எந்த வகையான மோதல், சண்டை, பிரச்சினைகளில் ஈடுபட்டவரும் அல்ல என்று கூறப்படுகிறது.
போலீஸாருக்கு குழப்பம்
உண்மையில் உமர் மீது என்ன மாதிரியான முத்திரை குத்துவது, இந்த சம்பவத்தை எப்படி வர்ணிப்பது என்பதில் புளோரிடா போலீஸாருக்கு குழப்பம் உள்ளதாம். அதிபர் ஒபாமாதான் இதை தீவிரவாத செயல் என்று வர்ணித்துள்ளார்.
சாதாரண வாழ்க்கை
இந்த சம்பவத்திற்கு முன்பு வரை சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் உமர். ஒரு செக்யூரிட்டி கார்டாக இவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன் (2வது மனைவி மூலம்) உள்ளான். போர்ட் பியர்ஸ் பகுதியில் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதியில் 2 பெட்ரூம் கொண்ட வீட்டில் தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வந்தார்.
ஆப்கானிஸ்தான் வம்சாவளி
நியூயார்க்கில் பிறந்தவர் உமர். இவரது பூர்வீகம் ஆப்கானிஸ்தான் ஆகும். இவரது தந்தை குடும்பத்துடன் இடம் பெயர்ந்து வந்ததாகும். இவரது தந்தை தலிபான் மீது சற்று அனுதாபமாக இருந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
போலீஸ் ஆசை
உமருக்கு சிறு வயதிலிருந்தே போலீஸ்காரராக ஆக வேண்டும் என்று தீராத ஆசை இருந்து வந்துள்ளது. நியயார்க் போலீஸ் சீருடையைப் போட்டுக் கொண்டு இவர் நிறைய செல்பி படங்களை எடுத்து வைத்துள்ளார். தனது நண்பர்களிடமும் தான் போலீஸாக விரும்புவதாக தொடர்ந்து கூறி வந்துள்ளார்.
மனைவியிடம் கெட்ட பெயர்
இவரது முன்னாள் மனைவி பெயர் சித்தோரா யூசப்பி. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார். தனது கணவர் மிகவும் கோபக்காரர் என்றும் தன்னை அடித்து உதைப்பார் என்றும் கூறியுள்ளார் சித்தோரா.
நிலையற்ற மனிதர்
எனது கணவர் ஒரு நிலையாக இருக்க மாட்டார். என்னை அடிப்பார். வீட்டுக்கு வந்ததும் ஏதாவது ஒரு காரணத்திற்காக என்னை அடிப்பார். துணி துவைக்கவில்லை என்றால் அடிப்பார். இப்படி ஏதாவது காரணம். ஆன்லைன் டேட்டிங் தளம் மூலமாக அவரை சந்தித்தேன். பின்னர் அவருக்காக நான் புளோரிடாவுக்கு இடம் பெயர்ந்தேன். 2009ல் திருமணம் நடந்தது. உமரின் குடும்பத்துக்குச் சொந்தமான போர்ட் பியர்ஸ் வீட்டுக்கு இடம் பெயர்ந்து வந்து வசிக்க ஆரம்பித்தேன்.
2011ல் விவாகரத்து
எனது கணவரின் போக்குப் பிடிக்காததால் 2011ல் விவாகரத்து செய்து விட்டேன். எனது கணவருக்கு கடவுள் பக்தி அதிகம் என்று சொல்ல முடியாது. பெரும்பாலான நேரத்தை ஜிம்மில் கழிப்பார். அவருக்கு தீவிரவாதிகள் யாருடனும் தொடர்பு இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. எப்போதும் தனிமையில் இருக்கவே விரும்புவேர். யாரிடமும் பகிரங்கமாக எதையும் சொல்ல மாட்டார். என்னைப் பிரிந்த பின்னர் இன்னொரு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அப்பெண்ணும் பிரிந்து போய் விட்டார் என்றார் சித்தோரா.