சவுதி இளவரசரா இப்படி சொன்னாரு?... காலத்துக்கு ஏற்ப மிதவாத இஸ்லாமுக்கு மாறப்போகிறார்களாம்!
எல்லா மதத்தவரையும் ஏற்கும் வகையில் மிதவாத இஸ்லாமிற்கு திரும்புவோம் என்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
ரியாத் : எல்லா மதத்தவரையும் ஏற்கும் வகையில் மிதவாத இஸ்லாமிற்கு திரும்புவோம் என்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கூறியுள்ளார்.
இஸ்லாம் விதிகளை கடுமையாக கடைபிடிக்கும் நாடுகளில் சவுதி அரேபியா முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. ரியாத்தில் நேற்று எதிர்கால முதலீடுகளுக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளவரசர் முகமது பின் சல்மான் இஸ்லாமை மிதப்படுத்தும் வகையில் நடைமுறைக்கு ஏற்ற சூழலுக்கு நாம் திரும்ப உள்ளோம் என்றார்.
30 ஆண்டு கால வாழ்வை தீவிர இஸ்லாம் என்ற கொள்கையால் வீணடிக்க வேண்டாம். உலக நாடுகளுக்கு ஏற்ப அனைத்து மதத்தினரையும் அனுமதிக்கும் மிதமான இஸ்லாத்துக்கு மாறுவதில் தவறில்லை என்றும் அவர் கூறினார். பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் முகமது பின் இவ்வாறு அறிவித்தது அரங்கையே அதிர வைக்கும் வகையில் கைதட்டலுக்கு ஆளானது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இளவரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது பின் தனது அதிகாரத்திற்கு வந்த பின்னர் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். விஷன் 2030 என்ற இலக்கை நிர்ணயித்து அதற்கேற்ப பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை அவர் செய்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் முதன்முறையாக சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அடுத்த ஆண்டு முதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பணியாற்றும் இடங்களில் இன்றும் சவுதியில் பாலின பாகுபாடு காட்டப்படுகிறது. அல்கொய்தா போன்ற அமைப்புகளின் தாக்கத்தால் சன்னி இஸ்லாம் பிரிவினர் இது போன்ற பாகுபாடுகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. ஆனால் இளவரசர் இது குறித்து தன்னுடைய அறிவிப்பில் எந்த உறுதியையும் அளிக்கவில்லை.
சவுதி இளவரசரின் அனைத்து மதத்தினரையும் அனுமதிக்கும் அறிவிப்பானது அந்த நாடு தொன்றுதொட்டு பின்பற்றும் தீவிர இஸ்லாம் கொள்கைகள் கைகொடுக்கவில்லை என்பதை வெளிக்காட்டுவதாக பார்க்கப்படுகிறது. ஆனால் சவுதியில் அரசியல் முறை என்பது மதத்தை சார்ந்தே இருப்பதால் அதனை அவ்வளவு எளிதில் தூக்கி போட்டுவிட முடியாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.