'பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டோம்".. பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதி கொக்கரிப்பு.. சீண்டல் பேச்சு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக(COAS) பதவியேற்றுள்ள ஜெனரல் அசிம் முனீர், இந்தியாவால் ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் தாய் நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் காக்க ராணுவம் தயாராக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் ராணுவ தளபதியாக இருந்த ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா கடந்த 29ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இவருக்கு ஏற்கெனவே மூன்றாண்டுகள் பதவி நீடிப்பு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவருக்கு பிறகு அசிம் முனீர் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 3ம் தேதியன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ரக்சிக்ரி செக்டருக்கு சென்று அங்கு படைத் தளபதிகளையும், முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார்.
பரந்தூர் ஏர்போர்ட்.. சர்வதேச டெண்டரை கோரிய தமிழக அரசு! ஏர்போர்ட் எப்போது பயன்பாட்டிற்கு வரும்
தயார் நிலையில் பாகிஸ்தான்
அப்போது, அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, "பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக இந்திய அதிகாரிகள் தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிக்கைகளை நாம் கவனித்து வருகிறோம். அவர்கள் நம்மீது போரை சுமத்தினால், நம்முடைய பாதுகாப்புப்படையானது நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தை பாதுகாக்கும். அதற்காக நாம் தயாராக இருக்கிறோம். நீங்கள் கடினமான சூழலிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள். உங்களுக்கு எனது பாராட்டுக்கள்" என்று ராணுவ அதிகாரிகளுக்கும், போர் வீரர்களுக்கும் வாழ்த்துகளை கூறியிருந்தார். மேலும், "கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் எதிரி நாடு பாதகத்தை ஏற்படுத்தக்கூடிய எந்த முடிவுகளை எடுத்தாலும் அதனை நாம் உறுதியுடன் எதிர்கொள்வோம்" என்றும் கூறியுள்ளார்.
மோதல் போக்கு
இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த 2019ல் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது இந்த மோதல் போக்கை உச்சத்திற்கு கொண்டு சென்றது. பாகிஸ்தான் தனது நாட்டில் இருந்த இந்திய தூதரை நேரில் அழைத்து இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து திருப்பி அனுப்பியது. அப்போது ஏற்பட்ட உச்சக்கட்ட மனஸ்தாபம் தற்போது வரை வீரியம் குறையாமல் நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில் பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதி இவ்வாறு பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு இந்தியா தரப்பில் எவ்வித பதில் கருத்துக்களும் வெளியாகவில்லை. இந்த விவகாரங்கள் ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் பாகிஸ்தானிலிருந்து தொடர்ந்து ஊடுருவல் முயற்சி காஷ்மீர் வழியாக மேற்கொள்ளப்படுவதாக இந்திய ராணுவம் குற்றம்சாட்டி வருகிறது.
ஊடுருவல்
இதற்கேற்றால் போல் ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பிடிபடும் பயங்கரவாதிகள் பலரும் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் இந்திய ராணுவத்தின் சிறப்பான பணிகளின் காரணமாக எல்லை ஊடுருவல்கள் கணிசமாக குறைந்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்திருக்கிறது. கடந்த 2017ல் 136 பேர் ஜம்மு காஷ்மீர் வழியாக எல்லை தாண்டி இந்தியாவில் ஊடுருவியுள்ளனர். இது 2018ல் 143 ஆகவும், 2019ல் 138 என்கிற அளவிலும் இருந்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்று காலத்திலும் 51 பேர் எல்லைத் தாண்டி ஊடுருவியுள்ளனர். கடைசியாக 2021ம் ஆண்டு 34 பேர் இவ்வாறு அனுமதியின்றி உள்நுழைந்துள்ளனர்.
ட்ரோன்
மட்டுமல்லாது ஆளில்லா விமானம் முலம் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது, ஆயுதங்கள் கடத்தப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது. இதற்கு பெரும்பாலும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், தற்போது அமெரிக்காவுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ள இந்திய ராணுவம் இந்த ட்ரோன் ஊடுருவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது, பருந்துகள் மூலம் ட்ரோன்கள் கட்டுப்பாட்டை இழக்கச் செய்து, வீழ்த்தப்பட்ட ட்ரோன்களை நாய்களை கொண்டு எடுத்து வர புதிய திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தினை பாகிஸ்தான் எல்லைப்பகுதி முழுக்க முதல் கட்டமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.