பாகிஸ்தானில் திடீர் பதற்றம்: துணை ராணுவம்- போலீஸ் இடையே மோதல்- கராச்சியில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலீஸ்- துணை ராணுவம் உள்ளிட்ட மோதல்களால் அடுத்தடுத்த சம்பவங்களால் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. இந்த பதற்றத்துக்கு இடையே கராச்சியில் இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு எதிராக 11 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இம்ரான்கான் அரசை வீட்டுக்கு அனுப்புவோம்; ஊழல் அரசை தூக்கி எறிவோம் முழக்கங்களுடன் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் பேரணிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.
30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி தீபாவாளி போனஸ் - பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
கராச்சியில் பிரமாண்ட பேரணி
இதன் உச்சகட்டமாக சிந்து மாகாணத்தில் நடைபெற்ற சம்பவம் துணை ராணுவத்துக்கும் போலீசாருக்கும் இடையே மோதலாக வெடித்துள்ளது. கராச்சி நகரில் 2 நாட்களுக்கு இம்ரான்கான் அரசுக்கு எதிராக மிக பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பங்கேற்ற நவாஷ் ஷெரீப் மகள் மரியம் அனல்பறக்க பேசி இம்ரான்கான் அரசை நடுநடுங்க வைத்தார். அவரது கணவர் சப்தாரும் இந்த பேரணியில் இம்ரான் அரசுக்கு எதிராக ஆக்ரோஷத்தை காட்டினார்.
ஷெரீப் மருமகன் அதிரடி கைது
இப்பேரணி முடிந்ததும் ஹோட்டல் ஒன்றில் மரியமும் அவரது கணவர் சப்தாரும் தங்கி இருந்தனர். அவர்கள் தங்கிய ஹோட்டல் அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த துணை ராணுவத்தினர் நவாஸ் ஷெரீப் மருமகனான சப்தாரை கைது செய்தது. பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்தது. சப்தார் கைது விவகாரம்தான் இப்போது போலீசாருக்கும் துணை ராணுவத்துக்கும் இடையேயான பெரும் மோதலாக உருவெடுத்திருக்கிறது.
ராணுவத்தின் பிணைக் கைதியாக போலீஸ் ஐஜி
நவாஸ் ஷெரீப் மருமகனை கைது செய்வதற்கு சிந்து மாகாண அரசு, போலீஸ் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் அவரை கைது செய்ய வேண்டும் என துணை ராணுவம் முடிவு செய்தது. இதற்கான கோப்புகளில் கையெழுத்திட வேண்டும் என்பதற்காக சிந்து மாகாண ஐஜி முஸ்தாக் முஹாரை துணை ராணுவம் பிணைக் கைதியாக பிடித்து வைத்தது. சுமார் 4 மணிநேரமாக துணை ராணுவத்தின் பிடியில் போலீஸ் ஐஜி பிணைக் கைதியாக இருந்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது. நவாஸ் ஷெரீப் மருமகன் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி.
ராணுவத்துக்கு எதிராக போலீஸ்
பின்னர் போலீஸ் ஐஜியை துணை ராணுவம் விடுத்தது. ஆனால் துணை ராணுவத்தின் அடக்குமுறையை கண்டித்து சிந்து மாகாண ஐஜி உட்பட போலீஸ் அதிகாரிகள் நீண்டகால விடுப்பில் செல்வதாக அறிவித்தனர். இதனால் ராணுவம்- போலீஸ் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இந்த மோதல் பிற மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து இம்ரான்கான் அரசு இப்போது பிரச்சனையை தீர்ப்பதற்கும் பதற்றத்தை தணிக்கவும் அடுத்தடுத்து ஆலோசனைகள், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ராணுவம் மீது சிந்து மாகாண அரசு அதிருப்தி
சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா, போலீஸ் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது போலீசாருடன் சிந்து மாகாண அரசாங்கம் இணைந்து நிற்கும் என உறுதியளித்தார். மேலும் சிந்து மாகாணத்தில் அமைதியை நிலைநாட்டிய போலீசாரின் கண்ணியத்தை சீர்குலைக்கும் எந்த ஒருநடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது எனவும் துணை ராணுவத்தினருக்கு எச்சரிக்கையும் விடுத்தார். இந்த ஆலோசனையில் துணை ராணுவத்தால் கடத்தி பிணைக் கைதியாக வைக்கப்பட்ட போலீஸ் ஐஜி முஸ்தாக் முஹாரும் கலந்து கொண்டார்.
கராச்சியில் குண்டுவெடிப்பு- 5 பேர் பலி
இந்த பதற்றங்களுக்கு மத்தியில் கராச்சி நகரில் 2 மாடி கட்டிடத்தில் இன்று காலை பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். முன்னதாக செவ்வாய்க்கிழமையன்றும் கராச்சி நகரில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதில் 5 பேர் மட்டும் படுகாயமடைந்திருந்தனர். போலீசார்- துணை ராணுவம் மோதல், குண்டுவெடிப்பு சம்பவங்களால் பாகிஸ்தானில் அதிஉச்ச பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.