இந்தியாவை எச்சரிக்க "பார்டரில்" போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதா பாகிஸ்தான் ராணுவம்?
இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம் திடீர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்: இந்திய எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பகவல்பூர் நகரில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படையினர் 7 பேர் அண்மையில் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் எந்த தாக்குதலுக்கும் தாங்கள் தயார் என்பதை போல் பாகிஸ்தான் ராணுவம் எல்லையை ஒட்டிய பகுதியில் திடீர் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் ராணுவ தளபதி ரஹீல் ஷெரிப் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இப்பயிற்சியில் போர் விமானங்கள், ராணுவ ஹெலிக்காப்டர்கள், டேங்க்கள் மற்றும் தரைப்படைகள் பங்கேற்றுள்ளன.
இதனிடையே நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப், இந்தியாவின் தந்திர வேலைகள் பாகிஸ்தானை ஒன்றும் செய்யமுடியாது என்று கூறியுள்ளார். மேலும் பாகிஸ்தான் நிதானமாக இருப்பதை யாரும் பலவீனம் என தவறாக புரிந்துகொள்ள வேண்டாம், எதிரி நாட்டு முரட்டுத்தனத்திற்கு பாகிஸ்தானால் தக்க பதிலடி கொடுக்க முடியும் என்றுட் எச்சரித்துள்ளார்.
7 வீரர்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த அவர், இந்தியாதான் எல்லைப் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் சீர்குலைப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் மோசமான அட்டூழியங்களால் இந்தியா உலக நாடுகளின் கவத்தை திசை திருப்புவதாக கூறிய நவாஸ் ஷெரிப் இது வீண் முயற்சி என்றும் கூறினார்.
இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் போர் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது எல்லையோர கிராமங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.