ஒலிம்பிக் அணிவகுப்பில்.. கொரோனா தடுப்பு விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்.. வறுக்கும் நெட்டிசன்கள்!
டோக்கியோ: 'ஒலிம்பிக் 2020' தொடக்க விழா அணிவகுப்பில் பாகிஸ்தான் வீரர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை. பாகிஸ்தான் குழுவினரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'ஒலிம்பிக் 2020' ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. கடந்த வருடமே நடக்க வேண்டிய இந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக ஒரு வருடம் தாமதமாக தற்போது நடக்கிறது.
கொரோனா அச்சுறுத்தல்கள், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டிகளை மிக சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்று ஜப்பான் அரசு உறுதி பூண்டது.
பந்தல் வாடகையை எப்ப தருவீங்க சார்? - பணம் தராத போலீஸார் மீது புகார் கொடுத்த பந்தல் அமைப்பாளர்
புகுந்த கொரோனா
போட்டிக்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே ஒவ்வொன்றாக திட்டமிட்டு செய்தது. போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தங்கக்கூடிய ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மிக கடுமையாக பின்பற்றப்பட்டன. ஆனால் இதையும் மீறி ஒலிம்பிக் கிராமத்துக்குள் கொரோனா புகுந்தது. பாதிப்பு பெரிதாக இல்லையென்றாலும், தொற்று பரவி விடக்கூடாது என்பதில் ஜப்பான் முழு கவனத்துடன் இருந்தது.
தொடக்க விழா
டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நேற்று கோலாகலமாக நடந்த தொடக்க விழாவில் மிக கடுமையான கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. தொடக்க விழாவில் ரசிகர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 204 நாடுகளின் அணி வீரர்கள் தங்களது நாட்டு தேசிய கொடியுடன் கம்பீரமாக வீறுநடை போட்டனர்.
மாஸ்க் கட்டாயம்
இவ்வாறு அணிவகுத்து செல்லும் வீரர்களும், அங்கு இருந்த தன்னார்வலர்கள், முக்கிய பிரமுகர்கள், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று கூறப்பட்டது. இதனை பெரும்பாலான நாட்டு வீரர்கள் பின்பற்ற பாகிஸ்தான் அணி வீரர்கள் கொரோனா விதிமுறைகளை மீறியது தற்போது தெரியவந்துள்ளது.
விதியை மீறிய பாகிஸ்தான்
தொடக்க விழா அணிவகுப்பில் பாகிஸ்தான் சார்பில் பேட்மிண்டன் வீராங்கனை மஹூர் ஷாஜாத், துப்பாக்கி சுடும் வீரர் கலீல் அக்தர் ஆகியோர் தலைமையேற்று தேசியகொடி ஏந்தி என்றனர். அப்போது வீராங்கனை மஹூர் ஷாஜாத் சரியாக மாஸ்க் அணியவில்லை. அவரது மாஸ்க் கன்னத்துக்கு கீழே சரிந்து இருந்தது. இதேபோல் கலீல் அக்தர் மாஸ்க் மூக்கினை மூடுவதற்கு பதிலாக வாயை மூடி இருந்தது.
நெட்டிசன்கள் கண்டனம்
இதேபோல் இந்த அணிவகுப்பில் சென்ற மற்றவர்களும் சரிவர மாஸ்க் அணியவில்லை. ஒலிம்பிக்கில் கடுமையான கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றி வரும் நிலையில் பாகிஸ்தான் குழுவினரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நெட்டிசன்கள் பாகிஸ்தான் வீரர்களை விட்டு விளாசி வருகின்றனர். இதேபோல் கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் அணிகளின் பெரும்பாலான உறுப்பினர்களும் அணிவகுப்பில் மாஸ்க் அணியாமல் சென்றுள்ளனர்.