கோர்ட் அபராதத்தை கட்ட குழந்தைகளை விற்க முன்வந்த பாகிஸ்தான் நபர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒருவர் பழங்குடியின நீதிமன்றம் விதித்த அபராத தொகையை செலுத்த தனது 4 குழந்தைகளை ரூ.16 லட்சத்திற்கு விற்க முன்வந்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள சிந்த் மாகாணத்தில் இருக்கும் ஜேக்கோபாபாத்தைச் சேர்ந்தவர் குலாம் ரசூல் கடோஹார். கோசோ பழங்குடியினத்தைச் சேர்ந்த ரசூலின் மகன் அதே பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்ததாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த பழங்குடியின நீதிமன்றம் ரசூலின் மகன் மீதான குற்றம் உண்மை என அறிவித்து அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் அளித்து பிரச்சனையை தவிர்க்குமாறு தெரிவித்தது.
ரூ.16 லட்சம் அபராத தொகையை செலுத்தும் அளவுக்கு ரசூலிடம் பணம் இல்லை. அதனால் அவர் தனது 2 மகள்கள் மற்றும் 2 பேத்திகளை விற்று அபராத தொகையை செலுத்த முடிவு செய்தார்.
இதையடுத்து 2 வயது முதல் 8 வயது வரை உள்ள தனது மகள்கள் மற்றும் பேத்திகளை பிரஸ் கிளப்பிற்கு அழைத்துச் சென்று அவர்கள் விற்பனைக்கு என்று அறிவித்தார்.