காதலனுடன் ஓடிப்போன பெண்ணை கோர்ட்டுக்கு வெளியே கல்லால் அடித்து கொன்ற குடும்பம்
லாகூர்: அத்தை மகனை கல்யாணம் கட்டிக்கொள்ளாமல் வேறு ஒருவரை திருமணம் செய்த பெண்ணை அவரது தந்தை, சகோதரன் மற்றும் உறவினர்கள் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரை சேர்ந்தவர் 25 வயதான பர்சானா இக்பால். இவருக்கும், அத்தை மகனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருந்த நிலையில் தான் காதலித்து வந்த நபருடன் பர்சானா வீட்டைவிட்டு ஓடிச் சென்று திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து தனது மகளை கடத்தி சென்றதாக பர்சானாவின் கணவன் மீது தந்தை போலீசில் புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பான வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது தன்னை யாரும் கடத்தவில்லை, விரும்பிதான் திருமணம் செய்தேன் என்று சாட்சியம் கூறுவதற்காக பர்சானா கோர்ட்டுக்கு வந்திருந்தார்.
பர்சானா கோர்ட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தபோது அவரது தந்தை, சகோதரன், திருமணம் நிச்சயமான அத்தைமகன் மற்றும் உறவினர்கள் சுமார் 25 பேர் அவரை சுற்றிவளைத்து கல், செங்கற்களால் கொலைவெறியோடு தாக்கினர். மண்டை பிளந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பர்சானாவை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பர்சானா உயிரிழந்தார்.
கொலை குற்றவாளியான பர்சானாவின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில் பிறர் தப்பியோடிவிட்டனர். காதலுக்கு எதிராக கவுரவ கொலை செய்துவிட்டதாக பர்சானாவின் தந்தை பெருமிதத்துடன் போலீசில் வாக்கு மூலம் அளித்தார். பாகிஸ்தானில் ஆண்டுக்கு ஆயிரம் பெண்களாவது கவுரவ கொலைக்கு உள்ளாகிறார்கள் என்று கூறப்படுகிறது. தங்கள் குடும்பத்தின் விருப்பத்தை மீறி பெண் ஒருவர் சுயமாக திருமண முடிவை எடுப்பதை பாகிஸ்தானில் பெரும்பாலானோர் பெரும் குற்றச்செயலாக பார்க்கிறார்கள்.
பாகிஸ்தானில் ஒரு விநோதமான சட்டம் உள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள் அல்லது குடும்பத்தார், குற்றவாளிகளை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டால் குற்றவாளிக்கு தண்டனை கிடையாதாம். கவுரவ கொலைகளில் கொலையாளிகளும், குடும்பத்தினரும் ஒரே ஆட்களாக இருப்பதால், எளிதாக கொலை வழக்குகளில் தப்பிவிடுவதாக, பெண்கள் நலனுக்காக போராடிவரும் அவுராத் அமைப்பு தெரிவிக்கிறது.