இந்தியாவுக்கு அதிநவீன “ஹார்பூன்” ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: இந்தியாவுக்கு அதிநவீன ஏவுகணையான "ஹார்பூன்' ஏவுகணைகள் வழங்கப்பட உள்ளன என்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இது குறித்து பென்டகன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியா நம் நெருங்கிய தோழமை நாடு. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகவும் முக்கியமான நாடு. வளமிக்க நட்பினை நம்முடன் நிலைநிறுத்தி இருக்கும் நாடு என்று புகழாரம் சூட்டியுள்ளது.
ராணுவ ஒப்பந்தங்கள்:
மேலும் அதில், இருநாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தங்கள் உள்ளன. அந்நாட்டிற்கு ஏற்கனவே நாம் வான் வழி தாக்குதலுக்கான "ஹார்பூன்" ஏவுகணைகளை வழங்கப்பட்டுள்ளது.
ஹார்பூன் ஏவுகணைகள்:
அந்த வகையில் தற்போது நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஹார்பூன் ஏவுகணைகள் வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1200 கோடி மதிப்பு:
மொத்தம் 1200 கோடி ரூபாய் செலவில் இந்தியா அந்த ஏவுகணைகளை வாங்க உள்ளது. இவ்வகை ஏவுகணைகளை அமெரிக்காவின் "போயிங்" விமான நிறுவனத்தின் ஒரு பிரிவு 1977 முதல் தயாரித்து வருகிறது.
தகர்க்கும் வல்லமை அதிகம்:
12.6 அடி நீளமும் 1.1 அடி விட்டமும் கொண்ட இந்த ஏவுகணைகள் 690 கிலோ எடை கொண்டவை. நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் போது பெரிய கப்பலையும் தகர்க்கும் வல்லமை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.