வீடுகட்ட உருவப்படும் செங்கற்கள்..காணாமல் போகும் உலக அதிசய சீனப் பெருஞ்சுவர்...
பீஜிங் : உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் அண்மைக்காலமாக உள்ளூர் மக்களின் அலட்சியம் மற்றும் இயற்கை வானிலை காரணமாக 30% அளவுக்கு முற்றிலும் சேதமடைந்து விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர் எவ்வித இடைவெளியும் இன்றி ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டதாகும். ஷான்ஹாய்குவானில் இருந்து ஜியாயூகுவான் கோபி பாலைவனம் வரை நீண்ட நெடிய தூரம் கொண்டது அந்த பெருஞ்சுவர்.
கி.மு. 3-ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட சீனப்பெருஞ்சுவரின் கட்டுமான பணிகளில் சுமார் 6,300 கிலோ மீட்டர்கள் 1368-1644-க்கு இடைப்பட்ட மிங் வம்சத்தினரால் கட்டப்பட்டது.
இதில், 1,962 கிலோ மீட்டர்கள் நீள சுவரானது பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், காற்று, மழை போன்ற இயற்கை வானிலை காரணத்தாலும், வலுவிழந்து சிதைந்துவிட்டது. 2014-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரியவந்தது.
இந்நிலையில், அங்கு வசிக்கும் உள்ளூர் மக்கள் சீனப்பெருஞ்சுவரில் உள்ள செங்கற்களை வீடு கட்டுவதற்கு திருடிச் சென்று விடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் அலட்சியமாக சீனப்பெருஞ்சுவருக்கு சேதத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் அங்குள்ள லூலாங் மாகாணத்தில் உள்ள ஏழை கிராம மக்கள் கடினமான, கருநிற சீனப்பெருஞ்சுவர் செங்கற்களை திருடி ஒரு செங்கல்லை 30 யுவானுக்கு உள்ளூரில் விற்றுவிடுகின்றனர்.
இதையடுத்து, செங்கற்களை திருடுவோருக்கு 5 ஆயிரம் யுவான் அபராதம் விதிக்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது.
சீனாவின் கலாச்சார, கட்டிடக்கலையை உலகிற்கு பறைசாற்றி வரும் சீனப்பெருஞ்சுவருக்கு நேர்ந்திருக்கும் இந்த ஆபத்து சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.