டைட்டானிக் மூழ்கக் காரணமான பனிப்பாறையின் போட்டோ... ரூ. 21 லட்சத்திற்கு ஏலம்!
லண்டன்: டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாக காரணமான பனிப்பாறையின் புகைப்படம் ரூ. 21 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பயணிகள் சொகுசுக் கப்பல் என்ற பெருமையைச் சுமந்து கொண்டு இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயார்க் நகருக்கு சென்ற டைட்டானிக் கப்பல், 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பனிப்பாறை ஒன்றில் மோதி விபத்தில் சிக்கியது.
இதில், கப்பலில் பயணம் செய்த பயணிகள், கப்பல் ஊழியர்கள், கேப்டன் உட்பட 1,503 பேர் உயிரிழந்தனர்.
மெனு கார்டு ஏலம்...
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான மெனு கார்டு ஏலம் விடப்பட்டது. ஆன்லைன் மூலம் ஏலத்திற்கு வந்த இந்த மெனு கார்டு ரூ. 5.82 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
பிஸ்கட்...
இதேபோல், இந்தக் கப்பல் விபத்தில் உயிர் பிழைத்த பயணி ஒருவரிடமிருந்து மீட்கப்பட்ட பிஸ்கட் ஒன்றும் ஏலம் விடப்பட்டது. கடலில் பயணிப்பவர்களுக்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அந்த பிஸ்கட்டை, லண்டனைச் சேர்ந்த கலைப்பொருள் சேகரிப்பாளர் ஒருவர் 23 ஆயிரம் டாலருக்கு ஏலத்தில் எடுத்தார். இது இந்திய மதிப்பில் 14 லட்சத்து 95 ஆயிரத்து 723 ரூபாய் ஆகும்.
பனிப்பாறை...
இந்த வரிசையில், டைட்டானிக் கப்பல் விபத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்ததாகக் கருதப்படும் பனிப்பாறையின் புகைப்படமும் ஏலத்தில் விடப்பட்டது. இது டைட்டானிக் விபத்து நடந்த மறுதினம், அதே வழியில் சென்ற மற்றொரு சிறிய கப்பலின் தலைமை சமையல்காரர் எடுத்ததாகும்.
கலைப்பொருள் சேகரிப்பாளர்...
இந்த புகைப்படத்தை இங்கிலாந்தை சேர்ந்த ஒரு கலைப்பொருள் சேகரிப்பாளர் 21 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலத்தில் எடுத்தார். இது இந்திய மதிப்பில் சுமார் 21 லட்சம் ரூபாய் ஆகும்.