பிரேசிலில் தொடங்கியது பிரிக்ஸ் மாநாடு! சீன அதிபருடன் மோடி பேச்சுவார்த்தை
போர்டாலிசா: ‘பிரிக்ஸ்' அமைப்பின் 6வது உச்சி மாநாடு பிரேசில் நாட்டிலுள்ள போர்டாலிசா நகரில் இன்று தொடங்கியது. பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளான இந்தியா, பிரேசில், ரஷியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் பிரதமர் மற்றும் அதிபர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
மோடி பயணம்
மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரேசில் புறப்பட்டார். வழியில் ஜெர்மனியில் இரவு தங்கிய மோடி நேற்று போர்டாலிசா போய்ச் சேர்ந்தார். விமான நிலையத்தில் அவரை இந்திய தூதர் அசோக் தாமர் மற்றும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும் பிரேசில் நாட்டு அமைச்சருமான லூயிஸ் ஆல்பர்ட்டோ ஆகியோர் வரவேற்றனர்.
மாநாடு தொடங்கியது
போர்டாலிசா நகரில் இன்று பிரிக்ஸ் நாடுகள் மாநாடு தொடங்கியது. பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் தலைமை தாங்கினார். பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென் ஆப்பிரிக்கா அதிபர் ஜேக்கப் ஜுமா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சீன அதிபருடன் சந்திப்பு
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை போர்டாலிசா நகரில் தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இரு நாடுகளிலும் நிலவும் தீவிரவாதிகள் பிரச்சினை பற்றியும் விவாதித்தனர். இந்துக்கள் கைலாஷில் இருந்து சீனாவில் உள்ள மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொள்வதற்கான புதிய வழித்தடம் அமைப்பது பற்றி பிரதமர் மோடி வலியுறுத்தினார். இருவரும் 80 நிமிடம் பேசினார்கள்.
மோடிக்கு அழைப்பு
இந்த சந்திப்பின் போது சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை செப்டம்பர் மாதம் இந்தியா வருமாறு மோடி அழைப்பு விடுத்தார். அதை சீன அதிபர் ஏற்றுக் கொண்டார். டெல்லியில் மீண்டும் எல்லைப் பிரச்சினை பற்றி பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதே போல் சீனா வருமாறு மோடிக்கு ஜீ ஜின்பிங் அழைப்பு விடுத்தார். இதை மோடி ஏற்றுக் கொண்டார். அவர் நவம்பர் மாதம் சீனா செல்ல முடிவு செய்துள்ளார்.
வளர்ச்சி வங்கி அமைவது எங்கே?
6வது மாநாடு, தென்ஆப்பிரிக்காவின் டர்பனில் நடந்த போது பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்கு வங்கி தொடங்குவது பற்றி முடிவு செய்யப்பட்டது. இன்றைய மாநாட்டில் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் தலைமையகம் அமைய இருக்கும் இடம் குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படுகிறது.
சீனாவின் ஷாங்காய் அல்லது இந்தியாவின் டெல்லி ஆகிய இரு நகரங்களில் ஏதாவது ஒரு நகரில் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியின் தலைமையகம் அமைய இருக்கிறது. புதிதாக தொடங்க உள்ள பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியில் 5 நாடுகளுக்கும் சமமான பங்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.