வாடிகனில் போப் பிரான்சிஸ்சுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.. இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு!
வாடிகன்: இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவும் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளதால் இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை ஏற்று தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இத்தாலி தலைநகர் ரோம் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இத்தாலிய அரசு உயர் அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இத்தாலியில் பிரதமர் மோடி
அங்கு வசிக்கும் இந்தியர்களும் கொடுத்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்வலஸ் மிக்கேல், ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன் ஆகியோரை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து அவர் ரோமின் பியாகா காந்தி பகுதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

போப் பிரான்சிஸ்சுடன் சந்திப்பு
இதனை தொடர்ந்து பிரதமர் மோடி ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி வாடிகன் நகருக்கு மோடி சென்றடைந்தார். அங்கு கத்தோலிக்க தலைவரான போப்பாண்டவர் என்றழைக்கப்படும் போப் பிரான்சிஸ் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதனை தொடர்ந்து மோடியும், போப் பிரான்சிசும் சந்தித்து பேசினார்கள்.

1 மணி நேரம் பேசினார்கள்
பிரதமர் மோடி போப் பிரான்சிசை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று, உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை 20 நிமிடங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் மோடியும், போப் பிரான்சிசும் ஒரு மணி நேரம் பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு
அப்போது இந்தியாவுக்கு வருமாறு போப் பிரான்சிஸ்க்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, ''போப் பிரான்சிஸ் அவர்களுடன் மிகவும் அன்பான சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, மேலும் அவரை இந்தியாவுக்கு வருமாறும் அழைத்தேன். @Pontifex' என்று கூறியுள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் பிரதமருடன் சென்றிருந்தனர். ஜி 20 உச்சி மாநாட்டில் கொரோனா கால பாதிப்புகள், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்த 2 நாள் பயணத்தின்போது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் மோடி சந்தித்து பேச உள்ளார்.












Click it and Unblock the Notifications