”பில்” கட்டாததால் “பவர் கட்” – ஷெரீபுக்கு எதிராக போராடும் இம்ரான்கான் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் மின்சார கட்டணம் செலுத்தாத காரணத்தினால் அவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் செரீப் பதவி விலக வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெக்ரிக் இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் போராட்டம் நடத்தி வருகிறார்.
ஆனால் பதவி விலக நவாஸ்செரீப் மறுத்து விட்டார். எனவே அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டம் நடத்தும்படி தனது கட்சி தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசு வரிகள் நிறுத்தம்:
அதன்படி அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் மின்சாரம், குடிநீர் கட்டணங்களை செலுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
மின் கட்டணம் பெண்டிங்:
அதுபோன்று இம்ரான்கானும், இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு மின் கட்டணம் செலுத்தவில்லை. அங்கு 2 மெயின் இணைப்புகளும், ஆழ்குழாய் கிணறுக்கான ஒரு இணைப்பும் உள்ளது.
எச்சரிக்கை நோட்டீஸ்:
அதற்காக ரூபாய் 1 லட்சத்துக்கும் மேல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதை செலுத்தாமல் அவர் பாக்கி வைத்துள்ளார். எனவே அவருக்கு இஸ்லாமாபாத் மின் வினியோக நிறுவனம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது.
கண்டு கொள்ளாத இம்ரான்:
அதில் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை இம்ரான்கான் கண்டு கொள்ளவில்லை.
துண்டிக்கப்பட்ட மின்சாரம்:
எனவே, அவரது வீட்டுக்கான மின்சாரத்தை மின் வினியோக நிறுவனம் நேற்று துண்டித்துள்ளது.