நீடிக்கும் போர்... இந்திய மாணவர்களை மீட்க ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி பேச்சு
உக்ரைன் நாட்டில் நான்கு முக்கிய நகரங்களில் ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கீவ்: உக்ரைன் நாட்டில் 12வது நாளாக போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு சிக்கியுள்ள மாணவர்களை படிப்படியாக மீட்டுக்கொண்டு வருகின்றனர். சுமி நகரத்தில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இந்திய பிரதமர் மோடி 35 நிமிடங்கள் பேசி உள்ளார்.
Recommended Video

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் இறங்கியுள்ளன. இதனால் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் வலுத்திருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான இந்த சண்டையால் 11 நாட்களில் கிட்டதட்ட 15 லட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளனர்.போரில் இருந்து தப்பித்து 15 லட்சம் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்டவற்றில் தஞ்சமடைந்துள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின், ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அகதிகள் நெருக்கடி இது என்றும் ஐநா கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 24ஆம்தேதி ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. இரண்டு நாட்கள் கழித்து 26ஆம் தேதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் மோடி டெலிபோன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்தது தொடர்பாக பேசியதாக கூறப்பட்டது.
கீவ், கார்கிவ் நகரில் இருந்து ஏராளமான மாணவர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், சுமி நகரில் தற்போது சண்டை அதிகரித்துள்ளது.
இதனால் அங்கு சிக்கியுள்ள மாணவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடங்கி 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில், மாணவர்கள் கடுங்குளிர், உணவு தட்டுப்பாடு, தண்ணீர் வசதியின்றி தவித்து வரும் நிலை உருவாகியுள்ளது.
சுமியில் இருந்து மாணவர்கள் உடனடியாக வெளியேற தயாராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சுமியில் இருந்து மூன்று மணி நேர பயணத் தூரத்தில் உள்ள போல்டாவாவிற்கு வர வலியுறுத்தப்பட்டுள்ளனர். அங்கு வந்தால் இந்திய அதிகாரிகள் எளிதாக இந்தியாவுக்கு அழைத்து வந்து விடுவார்கள்.
சுமியில் இருந்து வெளியேறுவது தற்போதைய நிலையில் எளிதான காரியம் அல்ல. இந்த நிலையில்தான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 நாட்களாக நடைபெற்று வரும் போரினால் உயிரிழப்புகளோடு மிகப்பெரிய பொருளாதார இழப்புகளையும் உக்ரைன் சந்தித்துள்ளது. ரஷ்யாவிலும் பொருளாதார தடைகள் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. விலைவாசி ஏற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முட்டை, ரொட்டி , இறைச்சி உள்ளிட்டவற்றின் விற்பனைக்கு ரஷ்யா அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த சூழலில் ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்றாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசி உள்ளார். 35 நிமிடங்கள் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் போர் விவகாரம், இந்தியர்கள் வெளியேறுவது உள்ளிட்டவை குறித்து பேசியதாகவும், ரஷ்யா உக்ரைன் இடையேயான சமாதான பேச்சுவார்த்தைக்கு மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications