"ஆடம்பரத்தின் உச்சம்!" புருனே நாட்டில் பிரதமர் மோடி தங்கும் உலகின் மிக பெரிய அரண்மனை.. மிரள வைக்குதே
புருனே: பிரதமர் நரேந்திர மோடி இப்போது இரண்டு நாள் பயணமாக புருனே நாட்டிற்குச் சென்றுள்ளார். இந்தியப் பிரதமர் ஒருவர் புருனே நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். அங்கு அவர் உலகின் மிகப் பெரிய அரண்மனையான இஸ்தானா நூருல் இமானில் தங்குகிறார்கள். தங்கம், வெள்ளி என ஆடம்பரத்தின் உச்சமாக இருக்கும் இந்த அரண்மனையின் சிறப்புகள் குறித்து நாம் பார்க்கலாம்.
புருனே என்பது போர்னியோ தீவில் அமைந்துள்ள ஒரு சின்ன நாடு ஆகும். இதன் ஒரு பக்கம் தென் சீனக் கடலும் இருக்கிறது. மற்றொரு பக்கம் இது மலேசியாவின் சரவாக் பகுதியுடன் எல்லையைப் பகிர்கிறது.

சுல்தான்களால் ஆளப்படும் புருனே 1984ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து விடுதலை பெற்றது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 4.5 லட்சம் ஆகும். இந்த நாட்டின் சுல்தானை தான் பிரமதர் மோடி சந்திக்கிறார்.
இஸ்தானா நூருல் இமான்: பிரதமர் மோடி புருனேயின் சுல்தான் ஹசனல் போல்கியாவை அவரது அதிகாரப்பூர்வ இல்லமான இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் சந்திக்கிறார். தற்போது பயன்பாட்டில் இருக்கும் மிகப் பெரிய அரண்மனை இதுவாகும். இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் அது இடம் பெற்றுள்ளது. இது புருனேயின் தலைநகரான பந்தர் செரி பெகவான் அருகே அமைந்துள்ளது.
இந்த இஸ்தானா நூருல் இமான் அரண்மனை 1,788 அறைகள், 257 குளியலறைகள் மற்றும் 38 வகையான பளிங்குகளால் செய்யப்பட்ட 44 படிக்கட்டுகளைக் கொண்டுள்ளது.
நம்பிக்கையின் ஒளி: இஸ்தானா நூருல் இமான் என்றால் நம்பிக்கையின் ஒளி அரண்மனை என்று அர்த்தம். இது 1981இல் சுல்தான் ஹசனல் போல்கியாவால் கட்டப்பட்டது.. மூன்று ஆண்டுகள் சுமார் $1.4 பில்லியன் செலவில் கட்டப்பட்ட இந்த அரண்மனை 1984இல் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து புருனே சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டது. ஃபிலிப்பைன்ஸ் கட்டிடக்கலைஞர் லியானார்டோ லோக்சின் வடிவமைத்த இந்த அரண்மனை அந்நாட்டின் எதிர்காலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டு இருந்தது.
ஆடம்பரத்தின் உச்சம்: 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட இந்த அரண்மனை 257 குளியலறைகள் உட்பட 1,788 அறைகளைக் கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் 5,000 விருந்தினர்கள் சாப்பிடும் அளவுக்கு மிகப் பெரிய அறையும் இதில் இருக்கிறது. அரண்மனை உள்ளேயே 110 கார்கள் நிறுத்த முடியும். 200 குதிரைகளுக்கு ஏசி வசதியுடன் கூடிய தொழுவம், ஐந்து நீச்சல் குளங்கள், 1,500 பேர் பிரார்த்தனை செய்யக்கூடிய மசூதி ஆகியவையும் இதில் உள்ளன. இங்குள்ள படிக்கட்டுகள் 38 விதமான பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்டது.
புருனேயின் இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் மலாய் மரபுகளின் கலவையாக இந்த அரண்மனையின் கட்டிடக்கலை இருக்கிறது. 22 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட மையக் குவிமாடம் உட்பட பல தங்க மற்றும் வெள்ளி குவிமாடங்களை கொண்டதாக இது இருக்கிறது.
துபாயின் சொகுசு விடுதியான புர்ஜ் அல் அரபை வடிவமைப்பற்ற குவான் செவ் இந்த அரண்மனையின் உட்புறத்தை வடிவமைத்துள்ளார். அவை முழுக்க முழுக்க தங்கம் மற்றும் பளிங்குகளால் ஆனதாகும்.
பிரதமர் மோடி: இந்த அரண்மனையில் தான் பிரதமர் மோடி அந்நாட்டுச் சுல்தானைச் சந்திக்கிறார். அதேநேரம் இந்த அரண்மனையில் இதற்கு முன்பும் பல சர்வதேச நிகழ்வுகள் நடந்துள்ளது. 28வது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) பொருளாதார தலைவர்கள் கூட்டம் கூட இங்கு தான் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இஸ்தானா நூருல் இமான் உலகின் மிகப்பெரிய அரண்மனை என்றாலும், மிகவும் காஸ்ட்லி அரண்மனை இதுவல்ல.. லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையிடம் தான் உலகின் காஸ்ட்லி அரண்மனை என்ற சாதனை இருக்கிறது. அதன் மதிப்பு $2.9 பில்லியன் ஆகும்.












Click it and Unblock the Notifications