விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் நீடிக்கும் சிக்கல்.! லண்டன் நீதிமன்ற தீர்ப்பால் பின்னடைவு
Recommended Video
லண்டன்: ரூ.9,000 கோடி வங்கி கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, மீண்டும் மேல்முறையீடு செய்ய லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதனால் அவரை நாடு கடத்தி இந்தியாவிற்கு அழைத்து வருவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் பல வழக்குகள் நடைபெற்று வருகின்றன.
வங்கி கடன் மோசடி தொடர்பாக மல்லையா மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது லண்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது தொடர்பாக, லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. வழக்கின் போது இந்திய பொருளாதார அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஒன்றிணைந்து லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் மல்லையாவுக்கு எதிராக 150 பக்கங்களை கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்தன.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பர் முதல் நடைபெற்ற விசாரணையில், இறுதியாக விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக விஜய் மல்லையா லண்டன் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அவரது இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
எனினும் ஒருவாரத்திற்குள் எழுத்துப்பூர்வமாக அவர் புதிதாக மேல்முறையீட்டிற்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து விஜய் மல்லையா எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த விண்ணப்பத்தின் மீது, விரிவான விசாரணை நேற்று நடத்தப்பட்டது.
நீதிபதிகள் ஜார்ஜ் லெக்காட், ஆண்ட்ரூ போப்பிள்வெல் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு மீதான விசாரணை நடத்தப்பட்டது
விஜய் மல்லையா சார்பில் அவரது வழக்கறிஞர்களும், இந்திய அரசு சார்பில் வழக்கறிஞர்களும் கடுமையாக வாதாடினர். இரு தரப்பின் காரசாரமான வாதங்களை கேட்ட லண்டன் ராயல் நீிமன்றம், லண்டனிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தும் உத்தரவிற்கு எதிராக விஜய் மல்லையா மீண்டும் மேல்முறையீடு வழக்கு தொடர அனுமதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது
நேற்று நடத்தப்பட்ட விசாரணயின் போது மல்லையாவின் மனு நிராகரிக்கபட்டிருந்தால், அந்த தீர்ப்பு வெளியான 28 நாள்களுக்குள் அவர் நாடு கடத்தப்பட வேண்டும் என்ற் சூழல் இருந்தது.
ஆனால் மீண்டும் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.