தொடரும் யுத்த நிறுத்தம்: சிரியாவில் இருந்து ரஷ்யா விமானப் படை வெளியேற புதின் உத்தரவு
மாஸ்கோ: யுத்த நிறுத்தம் நீடித்து வரும் நிலையில் சிரியாவில் இருந்து ரஷ்யா விமானப் படையினர் வெளியேற அந்நாட்டு அதிபர் புதின் இன்று உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் சிரியாவின் டார்டஸ் துறைமுகம் மற்றும் கெமிம் விமானப்படை தளத்தில் ரஷ்யா ராணுவத்தினர் யுத்த நிறுத்தத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகாலமாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத்துக்கு எதிராக அமெரிக்கா ஆதரவுடனான கிளர்ச்சி குழு, அல்நுஸ்ரா முன்னணி மற்றும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கங்கள் என பல தீவிரவாத இயக்கங்கள் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் அல்நூஸ்ரா முன்னணி மற்றும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை அழிக்க அமெரிக்கா தலைமையில் அதன் நட்பு நாடுகள் களத்தில் இறங்கின. குர்து இன மக்களின் துணையோடு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு எதிராக உக்கிரமான தாக்குதல்களை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மேற்கொண்டு வந்தன. இதில் பல நகரங்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திடம் இருந்து மீட்கப்பட்டும் விட்டன.
சிரியா அதிபர் ஆசாத்துக்கு மறைமுகமாக ஈரானும் ராணுவ உதவிகளை வழங்கியது. இந்நிலையில் சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா ராணுவத்தை களமிறக்கியது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை மட்டுமின்றி அமெரிக்காவின் ஆதரவு கிளர்ச்சி குழுக்களையும் இலக்கு வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
இதனால் சர்வதேச நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் தவிர்த்த இதர கிளர்ச்சி குழுக்களுடன் அமைதி ஒப்பந்தத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு ரஷ்யாவும் ஒத்துழைப்பு அளித்தது.
இதனடிப்படையில் கடந்த மாதம் 26-ந் தேதி நள்ளிரவு 12 மணிமுதல் சிரியாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. 2-வது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனிவா நகரில் நேற்றும் நடைபெற்றது. தற்போது போர் நிறுத்தம் தொடரும் நிலையில் ரஷ்யா அதிபர் புதின் தமது நாட்டின் விமானப் படையினரை சிரியாவில் இருந்து வெளியேற இன்று உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் சிரியாவின் டார்டஸ் துறைமுகம் மற்றும் கெமிம் விமானப்படை தளத்தில் தொடர்ந்தும் ரஷ்யா ராணுவத்தினர் முகாமிட்டு யுத்த நிறுத்தத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்கா அதிபர் ஒபாமாவும் ரஷ்யா அதிபர் புதினும் ரஷ்யா ராணுவத்தினர் வெளியேறுவது தொடர்பாக தொலைபேசியில் விவாதித்தனர். அப்போது அமைதி முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.












Click it and Unblock the Notifications