பாகிஸ்தான், சீனாவுடன் ரஷ்யா திடீர் நெருக்கம்! இந்திய-அமெரிக்க உறவுக்கு பதிலடி!!
மாஸ்கோ: அமெரிக்காவுடன் இந்தியா நட்பு கொண்டுள்ள சூழ்நிலையில், பதிலடியாக ரஷ்யா, பாகிஸ்தானுடன் நெருக்கம் காண்பிக்க ஆரம்பித்துள்ளது. சோவியத் யூனியன் ரஷ்யா பல சிறு நாடுகளாக சிதறியதற்கு முன்பிருந்தே, இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு, சிறப்பாக இருந்து வந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில், இந்தியாவிற்கு தேவையான 70 சதவீத ஆயுதங்கள், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
பாகிஸ்தான் குறைவு
இந்திய ராணுவத்திற்கு தேவையான, பல அதிநவீன ஆயுதங்கள் ரஷ்யாவிடமிருந்தே பெறப்பட்டன. அப்போது, பாகிஸ்தான், வெறும், 2 சதவீத ஆயுதங்களை மட்டுமே ரஷ்யாவிடமிருந்து பெற்றது.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆயுதங்கள்
இந்நிலையில், சமீப காலமாக, இந்தியாவிற்கு தேவையான பெரும்பாலான ஆயுதங்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்கப்படுகிறது. அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலிடமிருந்தும் இந்தியாவுக்கு அதிக ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
பாகிஸ்தானுக்கு கூடுதல் ஆயுதங்கள்
இந்தியாவுடன், அமெரிக்காவுக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளதையடுத்து, ஆசிய கண்டத்தில், ரஷ்யா தன் நட்பு வட்டத்தை பெருக்கிக் கொள்ளவே, பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. சமீபத்தில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஷ்ய ராணுவ அமைச்சர், செர்கி சொய்கு, அந்நாட்டுடனான ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
சீனாவுடனும் ரஷ்யா கைகோர்ப்பு
ரஷ்யாவின் இந்த நடவடிக்கை, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது. பாகிஸ்தானுடனான ஒப்பந்தம் மட்டுமின்றி, சீனாவில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கவும், ரஷ்யா முன்வந்துள்ளது.
அமெரிக்காவுக்கு பதிலடி தருகிறது ரஷ்யா
ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவை தலையெடுக்க விடாமல் தடுக்க ரஷ்யா இதுபோன்ற முயற்சிகளை எடுக்க தொடங்கியுள்ளது. ஆனால் அதனால் ரஷ்யாவுடனான நீண்ட கால நட்பை இந்தியா இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியாவின் எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் ரஷ்யா நட்புறவை தொடர்ந்தால் இந்தியாவால் ரஷ்யாவுடன் இணக்கமாக செல்ல முடியாத சூழல் உருவாகும்.
புடின் வருகை
இந்நிலையில் அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ள ரஷ்ய அதிபர் புடின், இந்திய பிரதமர் மோடியுடன் ஆயுத ஒப்பந்தம் குறித்தும் பேசுவார் என்று தெரிகிறது. ரஷ்யா மீது மேலை நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடையை எதிர்கொள்ள இந்தியா உதவ புடின் கேட்டுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.