திடீர் திருப்பம்! விரைவில் முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? ரஷ்ய அதிபர் புதின் கூறிய அதி முக்கிய தகவல்
மாஸ்கோ: உக்ரைன் உடனான போர் 3ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் 16ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. பல பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் ராணுவத்தை ரஷ்யாவில் வீழ்த்த முடியவில்லை..
நகைச்சுவை நட்சத்திரம் டூ பஞ்சாப் முதல்வர்.. ஆம் ஆத்மி பகவந்த் மான் முன் இருக்கும் 3 பெரிய சவால்கள்!
உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், மரியுபோல் நகரங்களைக் குறிவைத்து, ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், பல பகுதிகளில் போர் தொடர்ந்தே வருகிறது.
உக்ரைன் போர்
இந்தப் போர் தொடர்பாகக் கடந்த பிப், 27 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் இரு நாட்டுப் பிரதிநிதிகள் பெலராஸ் எல்லையில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த வித உடன்பாடும் ஏற்படாத நிலையில், போர் தொடர்ந்தது. இதற்கிடையே நேற்றைய தினம் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் துருக்கி நாட்டில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். போர் முடிவுக்கு வருவதில் இந்தப் பேச்சுவார்த்தை முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய அதிபர் புதின் இப்போது தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதிபர் புதின்
உக்ரைன் உடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். அதே நேரம் மேற்குலக நாடுகள் தங்கள் மீது விதித்துள்ள தடை நடவடிக்கையைக் குறைத்துக் கொண்டால் மட்டுமே இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை அதிபர் மாளிகையில் சந்தித்த புதின் அப்போது பேசுகையில், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ரஷ்ய வளர்ச்சியை ஒரு போதும் தடுக்காது என்றும் அவை ரஷ்யா வலுவானதாகவே மாற்றும் என்றும் புதின் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின் மேலும் கூறுகையில், "உக்ரைன் உடனான பேச்சுவார்த்தை கிட்ட தட்ட எல்லா நாட்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் சில நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா சார்பில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விரிவாகப் பின்னர் பேசுகிறேன். அதேநேரம் மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவைப் பலவீனப்படுத்தாது, மாறாக வலுவானதாகவே மாற்றும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என்றார். புதின் பேச்சுவார்த்தை குறித்து பாசிட்டிவ் கருத்துகளைக் கூறுவது இதுவே முதல்முறையாகும். இது போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதையே குறிப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்
போர் பாதிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த போரால் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், குறைந்தது 20 லட்சம் பேர் இடம் பெயர்ந்து உள்ளனர். இந்தப் போர் அமெரிக்கா ரஷ்யாவுக்கும் பதற்றத்தைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. உக்ரைன் இந்த அளவுக்குப் போராடும் என்று ரஷ்ய ராணுவத்தினர் துளி கூட எதிர்பார்க்கவில்லை என்றும் இது அவர்களை ஆச்சரியப்படுத்தியதாகவும் அமெரிக்க உளவுத்துறை முகவர்கள் கூறுகின்றனர். அதேநேரம் இதுவரை ரஷ்யா தனது போக்கை மாற்றுவதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை.
ரஷ்யா கோரிக்கை
அதேநேரம் கிழக்கு உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவது, நேட்டோவின் விரிவாக்கம் ஆகியவை குறித்த ரஷ்யாவின் நிபந்தனைகளுக்கு மேற்குலக நாடுகள் பதில் அளித்தால் மட்டுமே உக்ரைனில் மோதல் முடிவுக்கு வரும் என்று ரஷ்ய அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "இந்த இரண்டு கேள்விகளுக்கும் நாங்கள் ஒரு தீர்வைக் காண வேண்டும். இது தொடர்பாக முடிவை எட்ட உக்ரைனிடம் வலியுறுத்தி வருகிறோம்.
நேட்டோ
எங்கள் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து வருவதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. நடக்க வேண்டிய அனைத்தும் நடக்கும் என நம்புவோம். பிறகு எல்லாம் முடிவடையும்" என்று தெரிவித்தார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக் கூடாது என்பது ரஷ்யாவின் முக்கிய நிபந்தனையாக இருந்தது. சமீபத்தில் தான் உக்ரைன், இனி நேட்டோவில் இணைவது குறித்து வலியுறுத்தப் போவதில்லை எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் போர் விரைவில் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.