பறந்து வந்த ஏவுகணை! தீக்கிரையாகி மூழ்கிய ரஷ்ய போர்க் கப்பல்! முதன்முறையாக ஒப்புக் கொண்ட ரஷ்யா!
கீவ் : ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் நின்று கொண்டிருந்த போர் கப்பல் உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் தீக்கிரையாகி மூழ்கடிக்கப்பட்ட நிலையில், இதனை உக்ரைன் வெற்றிகரமான ஏவுகணைத் தாக்குதல் என்று கூறியது. அதே நேரத்தில் குடிமக்களைக் குறிவைத்து எல்லை தாண்டி தாக்கியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 50 நாட்களில் 4.7 மில்லியனுக்கும் அதிகமான உக்ரைனியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் வடக்கு உக்ரைனில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, தலைநகரைக் கைப்பற்றத் தவறிய ரஷ்யா, கிழக்கு பகுதிகளில் மீண்டும் கவனம் செலுத்துகிறது.

உக்ரைன் போர்
டான்பாஸ் பகுதியில் புதிய மோதல்கள் நடக்கலாம் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்கி எச்சரித்துள்ள நிலையில், அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளில் உக்ரைனுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். பல நாட்களாக இப்பகுதியில் குண்டு மழை பொழிந்து வரும் ரஷ்ய படைகளுக்கு எதிரான போர் இறுதியில் உக்ரைனுக்கு சாதகமாக இருக்கும் என்று பென்டகன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரஷ்யா மீது தாக்குதல்
மாஸ்கோவின் கருங்கடலை தளமாகக் கொண்டு ரஷ்ய கடற்படையால் முற்றுகையிடப்பட்ட தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் , ரஷ்ய அதிகாரிகளின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பல நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. நேட்டோ உறுப்பு நாடுகளான போலந்து, லிதுவேனியா, லாத்வியா, எஸ்டோனியா ஆகியவற்றின் அதிபர்களான ஆண்ட்ர்செஜ் துடா, கிடானஸ் நவ்சேடா, எகிலிஸ் லெவிட்ஸ், அலார் காரிஸ் ஆகியோர் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

போர் கப்பல் மூழ்கடிப்பு
இதற்கிடையே உக்ரைன் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ரஷிய போர் கப்பல் சேதம் அடைந்து தீப்பிடித்துள்ளது. ஒடேசாவிற்கு தெற்கே 60 முதல் 65 கடல் மைல் தொலைவில் இந்த கப்பல் தீப்பிழம்புடன் காணப்பட்டதாகவும் , மாஸ்க்வா ஏவுகணை கப்பலான அது துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டபோது நீரில் மூழ்கியதாக ரஷ்ய ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். போர்க்கப்பலில் ஏற்பட்ட தீ காரணமாக அதில் இருந்த ஆயுதங்கள் சேதமடைந்ததாகவும், எனினும் ஊழியர்கள் உடனடியாக வெளியேறி விட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

விசாரணைக் குழு புகார்
அதே நேரத்தில், ரஷ்யர்களை குறிவைத்து உக்ரைன் ஏவுகணை துஷ்பிரயோகம் செய்ததாக அதன் முதல் உத்தியோகபூர்வ குற்றச்சாட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஆறு வான்வழித் தாக்குதல்கள் பிரையன்ஸ்க் எல்லைப் பகுதியில் குடியிருப்பு பகுதிகளை தாக்கியதாகவும், ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யா கூறியுள்ளது. கனரக ஆயுதங்களை ஏற்றிச் சென்ற இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி, உக்ரேனிய ஆயுதப் படைகள் ரஷ்ய வான்வெளிக்குள் சட்டவிரோதமாக நுழைந்தன என்று ரஷ்யாவின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications