சவூதி வாலிபருக்கு மூக்கில் முளைத்த பல்... ஆபரேஷன் மூலம் வெற்றிகரமாக அகற்றம்
ரியாத்: அடிக்கடி மூக்கில் ரத்தம் வெளியேறி அவதிப்பட்டு வந்த சவுதி வாலிபருக்கு, மூக்கில் முளைத்த பல் வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
சவுதி அரேபியாவில் வசித்து வந்த 22 வயது வாலிபர் ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக அடிக்கடி மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறியுள்ளது. இதற்கு சிகிச்சைப் பெறுவதற்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் அந்த வாலிபர். அங்கே அவரைச் சோதித்த மருத்துவர்கள், அவரது மூக்கில் பல் முளைத்திருந்ததைக் கண்டுப் பிடித்தனர். மேலும், அப்பல் மூக்கில் உராய்வதால் மூக்கில் அடிக்கடி ரத்தப்போக்கு ஏற்பட்டதும் தெரியவந்தது.
பின்னர் கிழக்கு சவுதியில் உள்ள மன்னர் ஃபஹ்த் ராணுவ மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் அப்பல் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தற்போது அந்த வாலிபர் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாயின் மேல் புறத்தில் சிலருக்கு அரிதாக இதுபோன்ற கூடுதல் பற்கள் முளைப்பதுண்டு என்று அந்த வாலிபருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.