புதிய நுண்ணுயிருக்கு அப்துல் கலாம் பெயர்... அசத்திய நாசா விஞ்ஞானிகள்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நுண்ணுயிருக்கு அப்துல்கலாமின் பெயரை வைத்து நாசா விஞ்ஞானிகள் கவுரவித்துள்ளனர்.
லாஸ்ஏஞ்சல்ஸ்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய நுண்ணுயிருக்கு அப்துல்கலாமின் பெயரை வைத்து நாசா விஞ்ஞானிகள் கவுரவித்துள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படும் இந்த நுண்ணுயிருக்கு 'சொலிபாசில்லஸ் கலாமி' என அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.
பூமியில் இருந்து சமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விண்வெளி நிலையத்தில் வடிகட்டிகளில் ஒரு விதமான நுண்ணுயிர் உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவின் 'ஜெட் புரோலிபியன் லேபரட்டரி' விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
பூமியில் காணப்படாது
இந்த நுண்ணுயிர் பாக்டீரியா வடிவத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது பூமியில் காணப்படுவதில்லை என்றும் இது விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுகிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அப்துல்கலாம் பெயர் சூட்டல்
இந்த நுண்ணுயிர் இந்தியாவின் மறைந்த ஏவுகணை விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல்கலாமின் பெயரை விஞ்ஞானிகள் சூட்டி கவுரவித்துள்ளனர். இதற்கு அவர்கள் சூட்டியுள்ள பெயர் 'சொலிபாசில்லஸ் கலாமி' என்பதாகும்.
கலாமை கவுரவிக்க
இந்த நுண்ணுயிர் கடந்த ஓராண்டுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டதாகும். அப்துல்கலாம் விண்வெளி ஆராய்ச்சியில் அளித்துள்ள பங்களிப்புகளை கவுரவிப்பதற்காக அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
நாசாவில் பயிற்சி பெற்றவர்
அப்துல் கலாம் 1963-ம் ஆண்டு நாசாவில் பயிற்சி பெற்றார். அங்கு பயிற்சி பெற்று வந்த பின்னர்தான் அவர் நாட்டின் முதல் ராக்கெட் ஏவுதளத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.