மலேசிய விமானம் பற்றி புதிய 'முக்கிய' தகவல்: தேடல் பகுதி மாற்றம்
கோலாலம்பூர்: விசாரணையாளர்களுக்கு புதிய தகவல் கிடைத்ததை அடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் வேறு பகுதியில் மலேசிய விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.
கடந்த 8ம் தேதி 239 பேருடன் சென்ற மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து மூழ்கியது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நினைத்ததை விட மலேசிய விமானம் வேகமாக சென்றதாக விசாரணையாளர்களுக்கு புதிய தகவல் கிடைத்துள்ளது.
தேடல் பகுதி
புதிய தகவலை அடுத்து விமானத்தை தேடும் இடம் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை விமானங்களும், கப்பல்களும் விமானத்தை தேடிய இடத்தில் இருந்து வடகிழக்கே 680 மைல் தூரத்தில் புதிய தேடல் இடம் உள்ளது.
விரிவாக்கம்
தேடல் பகுதி மாற்றப்பட்டதை அடுத்து 48 ஆயிரத்து சதுர மைல் தூரத்தில் இருந்து 1 லட்சத்து 98 ஆயிரத்து 200 சதுர மைல் வரை தேடல் பகுதி விரிவடைந்துள்ளது.
ரேடார்
விமானம் ரேடாரில் இருந்து மறையும் முன்பு பதிவு செய்யப்பட்ட தகவல்களை வைத்து பார்க்கையில் விமானம் நினைத்ததை விட படுவேகமாக பறந்துள்ளது. இதனால் எரிபொருள் சீக்கிரம் தீர்ந்து விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் வெகுதூரம் சென்றிருக்க முடியாது என்று கருதப்படுகிறது.
பொருட்கள்
தெற்கு இந்திய பெருங்கடலில் 300 பொருட்கள் மிதந்ததை தாய்லாந்து செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து அனுப்பியது. ஆனால் அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அந்த பொருட்களை நேரில் கண்டுபிடிக்க முடியவில்லை.