மலேசிய விமானம் வங்காள விரிகுடாவில்: ஆஸ்திரேலியாவின் கண்டுபிடிப்பை ஏற்க மறுத்த தேடல் குழு
பெர்த்: மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் வங்காள விரிகுடாவில் கிடப்பதாக ஆஸ்திரேலிய கடல் ஆய்வு நிறுவனம் கூறியதை ஏற்க விமானத் தேடல் குழு மறுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கடல் ஆய்வு நிறுவனமான ஜியோரெசொனன்ஸ் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் போன்று வங்காள விரிகுடாவில் பார்த்ததாக அறிவித்தது. ஆனால் விமானத் தேடலில் ஈடுபட்டுள்ள பல நாட்டு குழு ஆஸ்திரேலிய நிறுவன கண்டுபிடிப்பை ஏற்க மறுத்துள்ளது. அதன் கண்டுபிடிப்பு உண்மை இல்லை என்று தேடல் குழு தெரிவித்துள்ளது.
அதே சமயம் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கண்டுபிடிப்பில் உள்ள உண்மையை கண்டறிய சர்வதேச குழுவை நியமித்துள்ளதாக மலேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ஜியோரெசொனன்ஸ் தலைவர் டேவிட் போப் கூறுகையில்,
கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள் மலேசிய விமானத்தினுடையது தான் என்று எங்கள் நிறுவனம் தெரிவிக்கவில்லை. அது மாயமான விமானத்தின் பாகங்களா என்று விசாரணை நடத்த வேண்டும். நாங்கள் ஒரு பெரிய விஞ்ஞானிகள் குழு. எங்களை புறக்கணிக்கிறார்கள். நாங்கள் கண்டுபிடித்ததை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்து செய்தோம்.
மலேசிய அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டார்கள். மலேசிய விமானம் மாயமான நான்கு நாட்கள் கழித்து தேடலை துவங்கி மார்ச் 31ம் தேதி முதன்முதலாக எங்களின் கண்டுபிடிப்புகள் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம். பின்னர் ஏப்ரல் 15ம் தேதி முழு அறிக்கையையும் அளித்தோம் என்றார்.