ஈரான் அணுசக்தி விவகாரம்: வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த ஒப்பந்தம் உருவானது!
ஜெனீவா: ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டங்கள் விவகாரத்தில் வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்காகவே ஈரான் அணுசக்தித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகக் கூறி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன. எனினும், அணு மின்சாரம் தயாரிக்கவே ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக ஈரான் கூறிவருகிறது.
பச்சைக்கொடி...
இந்நிலையில் ஈரானின் அரசியல் மாற்ற்ம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் ஐநா மாநாட்டில் பங்கேற்க ஹசன் ரஹானி அமெரிக்கா சென்றார். அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் 15 நிமிடம் தொலைபேசியில் அவர் பேசினார். மிதவாத தலைவரான ரஹானி, அமெரிக்காவுடன் இணக்கமாக செல்ல தயார் என்று பச்சைக்கொடி காட்டினார்.
ஈரான் மீது போர் தொடுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த அமெரிக்காவின் நிலையும் மாறியது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ரஷ்யா உட்பட சில நாடுகள் வலியுறுத்தின.
ஜெனீவா பேச்சுவார்த்தை
இதைத் தொடர்ந்து ஜெனீவா நகரில் நான்கு நாட்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்கா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவேத் ஜவேரி ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
அதேபோல் ரஷ்யா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையை ஈரான் பிரதமர் ரஹானி, டெஹ்ரானில் இருந்தும், அமெரிக்காவில் இருந்து ஒபாமாவும் கண்காணித்தனர்.
நான்கு நாள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை விவரங்கள் வெளியே தெரியவில்லை. மிகுந்த ரகசியம் காக்கப்பட்டது. பேச்சின் இறுதியில் வரலாற்று சிறப்புமிக்க உடன்பாடு ஏற்பட்டது. இதில் முக்கிய அம்சங்கள்:
முக்கிய அம்சங்கள் என்ன?
- ஈரான் அணுஆயுத திட்டங்களை தீவிரப்படுத்தாது. அதை மீறி செயல்பட்டால் அதை கண்காணிக்க சர்வதேச குழு அழைக்க முடியும்.
- அணு சக்தி திட்டத்துக்கு தேவையான யுரேனியம் 5%க்கு மேல் வாங்குவது தடை செய்யப்படுகிறது.
- சர்வதேச அணு ஆய்வு குழு எப்போது வேண்டுமானாலும் ஈரானில் ஆய்வு செய்யலாம்.
- அணுசக்தி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால் ஈரான் மீதான சர்வதேச தடை 6 மாதத்துக்கு நிறுத்தி வைக்கப்படும்.
42000 கோடி ரூபாய் இழப்பீடு...
- அணுசக்தி திட்டங்களை முடக்கியதற்காக, 42000 கோடி ரூபாய் இழப்பீடு தரப்படும்.
- அணு சக்தி திட்டங்களை நிரந்தரமாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஈரான் எடுக்க வேண்டும்.
அமெரிக்கா, ஈரான் வரவேற்பு- இஸ்ரேல் அதிருப்தி
இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பைத் தடுப்பதற்கான முதல் மற்றும் முக்கிய படிக்கட்டு இது என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபர் ரஹானியும், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட குழுவினரின் அயராத உழைப்பின் பலனாக, புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், இந்தப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்குமே வெற்றிதான் என்றார்.
இந்தியா வரவேற்கிறது...
ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணு ஆயுதம் தயாரிக்கும் தனது நோக்கத்தை ஈரான் நிறைவேற்றிக் கொள்ள, இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்தியா வரவேற்கிறது என்றார்.