டிரம்ப் டவர் தொலைபேசி ஒட்டுக்கேட்பு: மறுக்கிறார் செனட் புலனாய்வு குழு தலைவர்
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு முன்னேரோ அல்லது பின்னரோ டிரம்ப் டவர் மீது அமெரிக்க அரசால் கண்காணிப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டதற்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்று செனட் குழு ஒன்று தெரிவித்திருக்கிறது.
அவருடைய தொலைபேசிகள் பதிவு செய்யப்பட்டன என்ற அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் கோரிக்கையில் உண்மையில்லை என்று செனட் அவையின் புலனாய்வு குழுவின் தலைவரும், குடியரசு கட்சியின் செனட் அவை உறுப்பினருமான ரிச்சர்டு ஃபர் கூறியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டிரம்ப் டவரின் தொலைபேசிகளை தனக்கு முன்னர் அதிபராக இருந்த பராக் ஒபாமா பதிவு செய்ய கட்டளையிட்டார் என்று டிரம்ப் முன்னதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த புலனாய்வு முடிவுகள் வந்த பின்னரும், அதிபர் டிரம்ப் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஷோன் ஸ்பைசர் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார்.
இவை விசாரணை முடிவுகள் அல்ல என்று சென்ட் அவை புலனாய்வு அறிக்கை பற்றி செய்தி துறை அமைச்சர் கூறியுள்ளார்.
அமெரிக்க விதிமுறைகளுக்கு மாறாக பிரிட்டனின் ஒட்டுக்கேட்கும் பிரிவான, ஜிசிஹெகியூ (GCHQ) என்ற மின்னணு கண்காணிப்பு அமைப்பிடம் டிரம்பை கண்காணிக்க ஒபாமா கேட்டுக்கொண்டார் என்று உறுதிப்படுத்தப்படாத ஃபாக்ஸ் நியூஸ் அறிக்கையை மேற்கோள்காட்டி ஸ்பைசர் விவரித்துள்ளார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டு "முற்றிலும் கேலிக்குரியது" என்று செல்டன்ஹாம் நகரிலிருந்து இயங்கும் அந்த அமைப்பு ஏற்கெனவே மறுத்துள்ளது.