ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அழைப்பை ஏற்று மொராக்கோ செல்ல முயற்சி- 14 வயது சிறுமி கைது
மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைய சென்ற 19 வயது இளம்பெண் மற்றும் 14 வயது சிறுமியை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர். அவர்கள் சிரியா அரசுக்கு எதிராகவும் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைய சென்ற இளம்பெண் மற்றும் 14 வயது சிறுமியை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைவதற்காக அவர்கள் மொராக்கோ செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட 14 வயது சிறுமி மைனர் என்பதால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. 19 வயது இளம் பெண்ணின் பெயர் பவுசியா அல்லால் முகமத் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் இளைஞர்கள், இந்த அமைப்பில் இணைய வேண்டும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. அந்த அழைப்பை ஏற்று இவர்கள் இருவரும் எல்லை தாண்டி மொராக்கோ செல்ல முயற்சித்துள்ளனர். இவர்கள் இருவர் தவிர மேலும், தீவிரவாத இயக்கத்தில் முயற்சி செய்ததாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
சிரியா மற்றும் ஈராக்கில் இருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நாட்டிற்கு ஊடுருவலாம் என்ற அச்சத்தில் உள்ள ஸ்பெயின் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.