பல்கலை.களை மூடிய தாலிபான்கள்.. கதறியழுத மாணவிகள்.. "பெருந்தவறு".. போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பயில அந்நாட்டு தாலிபன்கள் அரசு இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், வகுப்பறையில் பெண்கள் கதறி அழும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தாலிபன் அரசின் இந்த உத்தரவை எதிர்த்து மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகள் வரை அமெரிக்காவின் பிடியிலிருந்த ஆப்கானிஸ்தான் சமீபத்தில் அந்நாட்டை தாலிபன்களிடத்தில் ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிட்டது.
இந்நிலையில் புதியதாக பொறுப்பேற்ற தாலிபன் அரசு, பெண்கள் உட்பட அனைவருக்கும் கல்வி வழங்கப்படும் என்று வாக்களித்திருந்தது. மட்டுமல்லாது ஆப்கனை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறியிருந்தது.

பள்ளி கல்வி
இவ்வாறு இருக்கையில் கடந்த மார்ச் மாதம் இந்த அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி 5ம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டது. இது அந்நாட்டு பெண்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கத்திய நாடுகள் ஆப்கன் அரசின் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தன. ஆனால் தாலிபன்கள் அரசு அசைந்து கொடுக்கவில்லை. இதன் காரணமாக அந்நாட்டில் இருந்த உயர்நிலை பள்ளிகள், பெண்களுக்கான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவை அடுத்தடுத்து மூடப்பட்டன.

கட்டுப்பாடுகள்
பிரச்னை பெரியதான நிலையில் ஐநா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. ஆப்கனை உலக நாடுகள் இன்னும் அங்கீகரிக்காத நிலையில் இதுபோன்ற பிற்போக்கு நடவடிக்கைகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாலிபன்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய பள்ளி கல்வி தடை அறிவிப்பை தாலிபன்கள் அரசு திரும்ப பெற்றது. ஆனாலும் அதன் பின்னரான நாட்களில் பெண்களுக்கு எதிரான தொடர் சட்டங்களை இயற்றி வந்தது. பொது இடங்களுக்கு ஆண் துணையின்றி செல்லக்கூடாது. உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதற்கு தடையும் விதிக்கப்பட்டது.

உயர்கல்விக்கு தடை
மட்டுமல்லாது இருபாலர் பயிலும் கல்வி நிலையங்களில் திரைச்சீலை கொண்டு மாணவர்களையும் மாணவிகளையும் பிரிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு கூறியிருந்தது. இது மாணவர்கள் மத்தியிலும் அந்நாட்டு பெண்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக வெடித்து போல ஆப்கனில் மேற்குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை மெல்ல சூடுபிடிக்க தொடங்கின. இப்படி இருக்கையில் அந்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சகம் தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி பெண்கள் பல்கலைக்கழகங்களில் பயில தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு
ஏற்கெனவே பெண்களுக்கு இருந்த தடை காரணமாக அலுவலகங்களில் அவர்கள் பணியிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த புதிய தடை உத்தரவு மூலம் பெண்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என அந்நாட்டின் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து மாணவிகள் கண்ணீருடன் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சில பல்கலைக்கழகங்களில் தாலிபன் அரசின் இந்த முடிவை எதிர்த்து மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். நங்கர்ஹார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாலிபன் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்துள்ளனர்.
இந்நிலையில் தாலிபன் அரசின் இந்த முடிவு கடும் பேரழிவை ஏற்படுத்தும் என்று அந்நாட்டின் மகளிர் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் நிலோபர் பயத் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications