சூயஸ் கால்வாய் டிராபிக் ஜாம் ஓவர்.. ஆனால், அடுத்து வருகிறது சட்ட சிக்கல்.. கப்பல் ஊழியர்கள் நிலை?
கெய்ரோ: எல்லோருக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.. ஒருவழியாக சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த எவர் கிவன் சரக்கு கப்பல் அங்கிருந்து அகற்றப்பட்டு மிதக்கும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டதால் கடலில் ஏற்பட்ட ட்ராபிக் ஜாம் பிரச்சனை தீர்ந்துள்ளது.
அதே நேரம் கப்பலில் இருந்த 25 இந்திய பணியாளர்கள் சட்ட சிக்கலில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
2 லட்சத்து 24 ஆயிரம் டன் எடை கொண்ட எவர் கிவன், கப்பல் சீனாவில் இருந்து நெதர்லாந்து நாட்டுக்கு பயணம் பட்டபோது எகிப்து கட்டுப்பாட்டிலுள்ள சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்டது.
சூயஸ் கால்வாய்
மணல் புயல் வீசி, இதன்காரணமாக மாலுமி தடுமாறியதால் நடுவே கப்பல் நின்று போய்விட்டதாகவும், எனவே அந்தப் பகுதி வழியாக வேறு கப்பல்கள் செல்ல முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது . உலக வர்த்தகத்தில் சுமார் 12% சூயஸ் கால்வாய் வழியாக நடைபெறுகிறது. அந்த அளவுக்கு முக்கியமான வழித்தடம் இதுவாகும். கால்நடைகள், வாகனங்கள், கச்சா எண்ணை என பலதரப்பட்ட பொருட்கள் கப்பல் வழியாக இந்த ரூட்டில் செல்லும். எனவே, இந்த விபத்து காரணமாக பல்வேறு கப்பல் நிறுவனங்களுக்கும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. பல்வேறு நாடுகளில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. பொருளாதாரத்தில் கூட பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு சூயஸ் கால்வாய் டிராபிக் ஜாம் பிரச்சினை உருமாறி விட்டது.
டிராபிக் ஜாம் சரியானது
இந்த கப்பலில் பணிபுரிந்த ஊழியர்களில் 25 பேர் இந்தியர்கள் ஆகும். அவர்கள் பாதுகாக்க மீட்கப்பட வேண்டும் என்பது இந்திய அரசின் கோரிக்கையாக இருந்தது. நல்லவேளையாக முழு நிலவு காரணமாக ஏற்பட்ட அலை சீற்றத்தால் கப்பலை மீட்கும் பணி எளிதாக நடைபெற்றது. இன்று முதல் டிராபிக் ஜாம் சரியாகி சூயஸ் கால்வாய் வழியாக கப்பல்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்திய ஊழியர்கள்
இது ஒரு பக்கம் மகிழ்ச்சி தரும் செய்தி என்ற போதிலும் கூட, கப்பலில் பயணித்த 25 இந்திய ஊழியர்களும் சட்ட சிக்கலில் சிக்க வாய்ப்பு உள்ளது. சூயஸ் கால்வாய் ஆணையம் இந்த வழித்தடத்தில் அதிகாரம் செலுத்தும் அமைப்பாக இருக்கிறது . எகிப்து நாடு இப்படி ஒரு அமைப்பை ஏற்படுத்தி சூயஸ் கால்வாய் வணிகம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் மேற்பார்வை செய்யும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. இந்த விபத்து காரணமாக பல்வேறு கப்பல்களுக்கும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் கப்பலில் இருந்த ஊழியர்கள் மீது சூயஸ் கால்வாய் ஆணையம் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .
வீட்டுச் சிறை
முதல்கட்டமாக இந்த கப்பலை இயக்கிய மாலுமி மற்றும் அவருக்கு உதவி செய்த உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய கப்பல் ஊழியர்கள் சிலருக்கு கப்பல்களை இயக்குவதற்கு வாழ்நாள் தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக இந்த துறை சார்ந்த வல்லுனர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள். விசாரணை முடியும் வரை அவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஊழியர்கள் நிலவரம்
அதேநேரம் இந்த கப்பலை நிர்வகிக்கும் நிறுவனம் இதுவரை அது பற்றி வாய் திறக்கவில்லை. பொதுவாக கப்பல் நிறுவனம் இது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் ஆனால் அவர்கள் தாங்கள் தப்பிப்பதற்காக கப்பல் ஊழியர்களை பலிகடாவாக்கி விடுவார்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது.
ஊழியர்கள் நலம்
பெர்ஹார்ட் ஸ்கெல்ட் ஷிப் மேனேஜ்மென்ட் என்பதுதான், இந்தக் விபத்துக்குள்ளான கப்பலுக்கு சொந்தமான நிறுவனம். அது வெளியிட்டுள்ள அறிக்கையில் , கப்பலில் பயணித்த 25 ஊழியர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்கள் உடல்நலம் நல்ல நிலையில் இருக்கிறது. மீண்டும் கப்பல் மிதக்க வைக்க நடவடிக்கை எடுத்தபோது மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுடன் அவர்கள் தொடர்பில் இருந்தார்கள். தொடர் முயற்சிகள் காரணமாக கப்பல் மீட்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.