ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தலைநகரான ராக்காவில் நுழைந்தது சிரிய ராணுவம் !
பெய்ரூட்: ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைநகராக திகழும் ராக்கா நகரத்திற்குள் சிரிய ராணுவப் படைகள் 2014 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல் முறையாக நுழைந்துள்ளது அந்த அமைப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்த போரில் இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். 1 கோடியே 35 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர்.
ஒவ்வொரு நாளும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக துருக்கி வழியாக கிரீஸ் சென்று, அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றன. இதனால் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக வந்து தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிரியாவில் நிலவும் அசாதாரண சூழலை முடிவுக்கு கொண்டு வரவும், உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை ஒடுக்குவதற்கான முயற்சியில் சிரியா, ரஷ்யா மற்றும் ஈராக், நேட்டோ படைகள் தொடர்ந்து ஐஎஸ்க்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்ந நிலையில் சிரியாவின் ராக்கா நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. தற்போது ராக்காவினுள் சிரிய படைகள் நுழைந்துவிட்டன என்று சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. யூப்ரேட்ஸ் நதியின் மீது கட்டப்பட்டுள்ள தாப்கா அணையை நோக்கி அந்தப் படைகள் முன்னேறி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சிரிய ராணுவ படைகள் தற்போது ராக்கா நகருக்குள் நுழைந்துவிட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு சிரிய ராணுவப் படைகள் இப்போதுதான் முதன்முதலாக ராக்காவிற்குள் நுழைந்துள்ளனர். இந்த நிகழ்வு ஐ.எஸ். அமைப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.