நன்றி மறக்கமாட்டோம்! ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட தயார்! சிரியா வீரர்கள் ஆர்வம்
பெய்ரூட்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர் புரிய சிரியாவின் பாரா மிலிட்டரி படைப்பிரிவினர் ஆர்வமாக உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
Recommended Video
உக்ரைன்-ரஷ்யா இடையேயான மோதல் போராக மாறியுள்ளது. 3 வாரமாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யாவின் முக்கிய இலக்கான தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடியவில்லை.
இதற்கு உக்ரைன் படை வீரர்கள், பொதுமக்கள் தான் காரணம். இவர்கள் ரஷ்ய படைகளை முன்னேற விடாமல் தடுத்து வருகின்றனர். மேலும் ரஷ்ய வீரர்களும் மனதளவில் சோர்ந்துள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதுதான் புடின்.. அப்படியே 'ஸ்டன்' ஆன மேற்கு உலகம்.. உளவாளிகளை குழம்ப வைத்த ரஷ்யா! நடந்தது ஏன்?
ரஷ்யா அழைப்பு
இந்நிலையில் தான் மத்திய கிழக்கு நாடுகளின் வீரர்களுக்கு ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் அழைப்பு விடுத்தார். அதாவது ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போர் புரிய விரும்பும் நபர்கள் தன்னார்வலராக வரலாம் என்றார். மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 16,000 தன்னார்வலர்களை உக்ரைனில் நிலைநிறுத்த விலாடிமிர் புதின் பச்சை கொடி காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
சிரியா ஆர்வம்
இந்நிலையில் சிரியாவின் தேசிய பாதுகாப்பு படையின் (NDF) ஒரு பிரிவான பாரா மிலிட்டரி படையினர் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர் புரிய தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். இதுகுறித்து சிரியாவின் பாராமிலிட்டரி காமாண்டோ நபில் அப்துல்லா கூறுகையில், ‛சிரியா உள்நாட்டு போரின்போது எங்களுக்கு ரஷ்யா உதவி செய்தது. இதனால் ரஷ்யாவுக்கு உதவ தயாராக உள்ளோம். இதுகுறித்து இன்னும் சிரியா, ரஷ்யா நாடுகளின் தலைமையிடம் இருந்து உத்தரவு வரவில்லை. இந்த உத்தரவு வந்தவுடன் போரில் பங்கேற்போம். இந்த போரை கண்டு நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் பார்த்திராத போர் தந்திரங்களை நடைமுறைப்படுத்தி வெற்றி பெறுவோம். சிரியாவின் உள்நாட்டு போர் அனுபவம் எங்களுக்கு கைக்கொடுக்கும்'' என்றார்.
சகோதரர்களுக்கு உதவி
இதுகுறித்து 2வது என்டிஎப் காமாண்டோ சைமன் வாகேல் கூறுகையில், "ரஷ்யாவின் சகோதரர்களுக்கு ஆதரவாக போர் புரிய நிறைய பேர் விருப்பம் தெரிவிக்கின்றனர். ஆனால் இன்னும் இருநாட்டு தலைமைகளிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. ரஷ்யாவின் படைகளுக்கு நாங்கள் கூடுதல் வலு சேர்ப்போம். சிரியாவில் நடந்த போரில் ஏற்கனவே இருநாட்டினரும் சேர்ந்து பயங்கரவாதிகளை நசுக்கியுள்ளோம்'' என்றார்.
மிகக்குறைவானவர்கள்
இதுகுறித்து மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க படைகளை மேற்பார்வையிடும் குழு தலைவரான அமெரிக்காவின் மரைன் ஜெனரல் பிராங்க் மெக்கென்சி கூறுகையில், ‛‛சிரியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனில் போர் புரிய மிகவும் குறைவானவர்கள் மட்டுமே செல்ல விரும்புகின்றனர்'' என்றார்.
முன்னதாக உக்ரைன் சார்பில் ரஷ்யா-சிரியாவை இணைத்து குற்றச்சாட்டு ஒன்று வைக்கப்பட்டது. அதாவது ‛‛ரஷ்யா பல நாடுகளில் இருந்து கூலிப்படைகளை அழைத்து வருகிறது. இது மோசமான செயல். சிரியாவில் இருந்து வீரர்களை இறக்கி உள்ளனர். இவர்களுக்கு பல மடங்கு சம்பளம் வழங்கப்படுகிறது'' என குற்றம்சாட்டி இருந்தது. இந்த குற்றச்சாட்டுகளை தற்போது சிரியா முற்றிலுமாக மறுத்துள்ளது. நாங்கள் தன்னார்வலர்களாக தான் விருப்பம் தெரிவித்து உள்ளோம் என சிரியா கூறியுள்ளது. இருப்பினும் சிரியாவில் இருந்து பலரை ரஷ்யா போருக்கு பயன்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ரஷ்யா, சிரியா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சிரியா-ரஷ்யா உறவு எப்படி
மத்திய கிழக்கு நாடுகளில் சிரியா, ரஷ்யாவுடன் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ளது. 2015ல் சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்றது. அப்போது ரஷ்யா தலையீடு செய்து உதவி செய்தது. மேலும் சிரியா அதிபர் பஷர் அல்அசாத் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள கிளர்ச்சி படைகளை தோற்டித்தது குறிப்பிடத்தக்கது.