செப்டம்பர் 11.. மீண்டும் அமெரிக்காவிற்கு மறக்க முடியாத நாளாகிறதா?.. தாலிபன் அரசு புதிய முடிவு?
காபூல்: அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 11ம் தேதியாகும். கடந்த 2001ம் ஆண்டு இந்தமோசமான சம்பவம் நடந்தது. இந்நிலையில் அதே நாளில் தாலிபன்களின் புதிய அரசு ஆப்கானிஸ்தானில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என பிரபல ஆங்கில ஊடகமாக சிஎன்என் நியூஸ் 18 இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமாக உண்மையா என தெரியவில்லை.
1980களில் சோவியத் யூனியன் (ரஷ்யா) ஆதரவு அரசை விரட்டுவதற்காக அமெரிக்காவில் கொம்பு சீவப்பட்டவர் பின்லேடன். ஆள் பலம், படை பலம் என எல்லாவற்றையும் கொடுத்து ரஷ்யாவை விரட்டியடித்தது அமெரிக்கா. ஆனால் 1990களில் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின்னர் பின்லேடன் அமெரிக்காவிற்கு எதிராக திரும்பினார்.
ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரை தாலிபன்கள் ஆட்சி செய்தனர். அப்போது பின்லேடன் அங்குதான் இருந்தார். பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா பயங்கராவதிகள் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை விமானத்தை மோதி தகர்த்தனர். இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

அமெரிக்கா வேட்டை
இதையடுத்து பின்லேடனை ஒப்படைக்குமாறு தாலிபன்களிடம் அமெரிக்கா கேட்டது. ஆனால் அதில் அவருக்கு சம்பந்தம் இல்லை என்று மறத்ததுடன் அவரை ஒப்படைக்க மறுத்துவிட்டது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் மீது போரை அறிவித்த அமெரிக்கா, பின்லேடன் மற்றும் அல்கொய்தா இயக்கத்தினரை தேடி தேடி வேட்டையாடியது. அத்துடன் தாலிபன்களையும் ஓட ஓட விரட்டி அடித்தது.

மாகாணங்கள் வீழ்ந்தது
ஒரு கட்டத்தில் பின்லேடன் மற்றும் அல்கொய்தா இயக்கத்தினரை கொன்ற பின்னர், தாலிபன்களுடன் சமரசம் பேசிய அமெரிக்கா, படைகளை ஆகஸ்ட் 31ம் தேதியுடன் விலக்கி கொள்வதாக அறிவித்தது. இதையடுத்து ஆப்கன் அரசு படைகளுக்கு எதிராக போரை தொடங்கிய தாலிபன்கள், ஓட ஓட விரட்டி அடித்து ஒவ்வொரு மாகாணமாக கைப்பற்றினர்.

புதிய அரசு
கடைசியில் ஆகஸ்ட் 15ம் தேதி காபூலை கைப்பற்றிய தாலிபன்கள், சொன்னபடி ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடுவிதித்தனர். அதன்படியே அமெரிக்க படைகளும் வெளியேறின. அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அமைச்சர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து புதிய ஆட்சியை ஆப்கானிஸ்தானில் அமைப்பதற்கு தாலிபன்கள் தயாராகி வருகின்றனர். பல்வேறு குழுவினரிடம் நிர்வாக அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பேசினார்கள்.

ஆப்கன் புதிய பிரதமர்
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தாலிபன்கள் முடிவு செய்துள்ளனர். 'முல்லா முகமது ஹசன் அகுந்த்' ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார், மேலும் தாலிபன்கள் இயக்கத்தின் இணை நிறுவனர் அப்துல் கனி பரதர் அரசின் துணை தலைவராகவும் (துணை பிரதமர்) பொறுப்பேற்க உள்ளார். இருவருமே தாலிபன்கள் இயக்கத்தின் தலைமை தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸடாவிற்கு நெருக்கமானவர்கள் ஆவார். அரசின் அமைப்பின் தாலிபன் இயக்கத்தின் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்ஸடாதான் உச்ச பட்ச அதிகாரம் படைத்தவராக திகழ்வார்.

அமைச்சர்கள் யார் யார்
இதனிடையே முல்லா அப்துஸ் சலாம் இரண்டாவது துணை பிரதமர்களாக பொறுப்பேற்கிறார். ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சராக சிராஜூதின் ஹக்கானி, வெளியுறவு அமைச்சராக ஆமீர் கான் முத்தாகி. ஆப்கான் இடைக்கால அரசின் துணை வெளியுறவு அமைச்சராக ஷேர் முகமது அப்பாஸ் துணை வெளியுறவு அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் (இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர்), ஆப்கான் இடைக்கால அரசின் பாதுகாப்பு அமைச்சராக முல்லா யாகூப் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்

எப்போது பதவியேற்பு
தாலிபன்கள் புதிய அரசின் பதவியேற்புக்கு பாகிஸ்தான், ரஷ்யா, துருக்கி, ஈரான் மற்றும் கத்தார் நாட்டு அரசு தலைவர்களை அழைத்துள்ளனர். ஆனால் எப்போது பதவியேற்பு என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நாளான செப்டம்பர் 11ம் தேதி பதவியேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வேலைக்கு வாங்கப்பா
இதனிடையே ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமர் ஆக பதவியேற்க உள்ள முல்லா முகமது ஹசன் அகுந்த் கடந்த அரசாங்கங்களில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகளிடம் நாடு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார் . அவர்களுக்கு "முழு பாதுகாப்பு" அளிக்கப்படும் என உறுதி அளித்தார், இரத்தக்களரி காலம் முடிந்துவிட்டது என்றும், போரால் பாதிக்கப்பட்ட தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய இந்த கடினமான பணியை மேற்கொள்ள அவர்கள் முன் வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications