தாலிபானின் உச்சபட்ச தலைவரையே காணவில்லை?.. குழம்பும் அமெரிக்கா.. எங்கே போனார்.. என்ன நடந்தது?
காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்றாலும் அந்த அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹிபாதுல்லா அகுண்ட்சாடா இதுவரை வெளியே தலைகாட்டவில்லை. அவர் உண்மையில் உயிரோடு இருக்கிறாரா அல்லது அவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று மக்களிடையே கேள்விகள் எழ தொடங்கி உள்ளன. அதோடு அமெரிக்காவும் அவரின் இருப்பிடம் குறித்து சந்தேகம் கொள்ள தொடங்கி உள்ளது.
Recommended Video
தாலிபான்கள் அமைப்பின் மூன்றாவது தலைவராக பொறுப்பேற்று தற்போது அந்த அமைப்பை வழி நடத்தி வருபவர்தான் ஹிபாதுல்லா அகுண்ட்சாடா. கடந்த 1996 தாலிபான் ஆட்சியில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் துணை தலைமை நீதிபதியாக இருந்தவர் ஹிபாதுல்லா அகுண்ட்சாடா. அதன்பின் அமெரிக்க படையெடுப்பை தொடர்ந்து தலைமறைவானார்.
தாலிபான் அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த இவர் அந்த அமைப்பில் வேகமாக வளர்ந்து தற்போது உச்சபட்ச தலைவராக உருவெடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் வெற்றிக்கு பின் இருக்கும் மாஸ்டர் மைன்ட் இவர்தான். இவரின் மகன் கூட தாலிபான்கள் அமைப்பில் சேர்ந்து அமெரிக்க படைத்தளத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தி பலியானது குறிப்பிடத்தக்கது.

சகோதரர்
இவரின் சகோதரர், சித்தப்பா உள்ளிட்ட பல உறவினர்கள் அமெரிக்காவின் டிரோன் தாக்குதல்களில் ஏற்கனவே பலியாகிவிட்டனர். 3 முறைக்கும் மேல் நடத்தப்பட்ட கொலை முயற்சியில் இருந்து ஹிபாதுல்லா அகுண்ட்சாடாவும் தப்பி இருக்கிறார். அதோடு இவர் சில முறை இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டு பின் அந்த செய்தி மறுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 2018 வரை அமெரிக்காவின் மோஸ்ட் வான்டட் லிஸ்டில் இருந்தவர்தான் ஹிபாதுல்லா அகுண்ட்சாடா.

காணவில்லை
இந்த நிலையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் வெற்றிபெற்றவுடன் ஹிபாதுல்லா அகுண்ட்சாடா வெளியே வந்து மக்கள் முன் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காபூல் பாராளுமன்றத்தில் மக்கள் முன் வெற்றியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தாலிபான்கள் வென்று இரண்டு வாரம் ஆகியும் ஹிபாதுல்லா அகுண்ட்சாடா வெளியே தலைகாட்டவில்லை. ஆட்சி தொடர்பான ஆலோசனைகள் எதிலும் அவர் கலந்துகொள்ளவில்லை அல்லது வெளிப்படையாக கலந்து கொள்ளவில்லை.

எங்கே?
தோஹாவில் கடந்த வாரம் நடந்த தாலிபான் கூட்டத்திலும் ஹிபாதுல்லா அகுண்ட்சாடா இடம்பெறவில்லை. தாலிபானின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர் எங்கே போனார், எங்கே இருக்கிறார் என்பது இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. ஹிபாதுல்லா அகுண்ட்சாடாவின் ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே இதுவரை கடந்த 20 வருடங்களில் வெளியாகி உள்ளது. அதுவும் கூட எப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று யாருக்கும் தெரியாது. அந்த புகைப்படமும் கூட தாலிபான் வெளியிட்டது.

என்ன ஆனது?
அவ்வப்போது தாலிபான்கள் முன்னிலையில் இவர் பேசியதாக செய்திகள் வெளியானாலும் இவரின் இருப்பு இப்போது வரை உறுதி செய்யப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் அங்கு ஆட்சிக்கு வந்தும் ஹிபாதுல்லா அகுண்ட்சாடா வெளியே தலைகாட்டவில்லை. இவர் ஆப்கானிஸ்தானில் இருக்கும் கந்தகாரில் தங்கி இருப்பதாக தாலிபான்கள் தெரிவித்து உள்ளன. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இவரின் அடையாளத்தை, இருப்பிடத்தை தாலிபான்கள் தொடர்ந்து மறைத்து வருவதால் இவர் கந்தகாரில் இருப்பதாக வெளியாகும் செய்திகளும் நம்பும்படியாக இல்லை.

அமெரிக்கா
இதில் கவனிக்க வேண்டிய அமெரிக்காவாலும் கூட ஹிபாதுல்லா அகுண்ட்சாடாவின் இருப்பிடத்தை உறுதியாக சொல்லமுடியவில்லை. அமெரிக்காவும் இதில் குழம்பிப்போய் உள்ளது. ஹிபாதுல்லா அகுண்ட்சாடா விரைவில் மக்கள் முன் தோன்றுவார் என்று தாலிபான்கள் தெரிவித்து இருந்தாலும், அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. பெரும்பாலும் அமெரிக்க படைகள் வெளியேறிய பின் இவர் மக்கள் முன் தோன்றும் வாய்ப்பு உள்ளது. தாலிபான் அமைப்பின் உச்சபட்ச தலைவரே இப்படி எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருப்பது அந்நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கம்
பொதுவாக தாலிபான் அமைப்பு தங்கள் தலைவர்களை மறைமுகமாக வைத்து இருப்பது வழக்கம். உமர் அப்துல்லா 90களில் எங்கே இருந்தார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. அதோடு அவர் இறந்த செய்தி கூட பல வருடம் கழித்தே வெளியிடப்பட்டது. பெரும்பாலும் இவர்கள் கந்தகாரில்தான் வசித்து வந்தனர். இதற்கு முன் இருந்த இரண்டு தலைவர்களும் கந்தகாரில் தலைமறைவாக இருந்த நிலையில் ஹிபாதுல்லா அகுண்ட்சாடாவும் அங்கேயே தங்கி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications