பாக். பள்ளி ஆசிரியரை எரித்துக் கொன்று குழந்தைகளை பார்க்கச் செய்த தாலிபான்கள்
பெஷாவர்: பாகிஸ்தானில் உள்ள ராணுவ பள்ளிக்குள் புகுந்த தாலிபான் தீவிரவாதிகள் வகுப்பறையில் வைத்து ஆசிரியர் ஒருவரை உயிருடன் எரித்து அதை குழந்தைகள் பார்க்கச் செய்துள்ளனர்.
வடமேற்கு பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்குள் 7 தாலிபான் தீவிரவாதிகள் நேற்று புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 132 குழந்தைகள், 9 பள்ளி ஊழியர்கள் என மொத்தம் 141 பேர் பலியாகினர். பலியான குழந்தைகளில் பலர் 12 முதல் 16 வயது வரை உள்ளவர்கள்.
தீவிரவாதிகள் சுமார் 8 மணிநேரம் நடத்திய இந்த வெறியாட்டத்தால் உலக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குண்டுவெடிப்பு
பள்ளிக்குள் புகுந்த 7 தீவிரவாதிகளில் ஒருவன் 60 குழந்தைகள் இருந்த வகுப்பறையில் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் அந்த வகுப்பறையில் இருந்த அனைவரும் பலியாகினர்.
தீவிரவாதிகள் கொலை
பாகிஸ்தான் ராணுவத்தினர் 6 தீவிரவாதிகளையும் கொன்று நூற்றுக்கணக்கானோரை மீட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 120க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்
முன்னதாக தீவிரவாதிகள் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவரை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர். இந்த கொடூரச் செயலை குழந்தைகளை பார்க்கும்படி செய்துள்ளனர். ஏற்கனவே தங்களது நண்பர்கள் பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே பிணமாகக் கிடப்பதை பார்த்து பயத்தில் இருந்த மாணவர்கள் ஆசிரியர் எரித்துக் கொல்லப்பட்டதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
தலை துண்டிப்பு
தாலிபான் தீவிரவாதிகள் குழந்தைகளை சுட்டு மட்டும் கொலை செய்யவில்லை. மேலும் சில குழந்தைகளை தலையை துண்டித்தும் கொலை செய்துள்ளனர்.
வலி
ராணுவம் தங்களது குடும்பத்தை குறி வைப்பதால் அவர்களுக்கு வலி என்றால் என்னவென்று காட்ட அவர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியை தாக்கியதாக தாலிபான் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
மலாலா
தங்களால் தாக்கப்பட்ட மலாலா யூசப்சாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்ததை கண்டித்து அதற்கு பழிவாங்கவும் தாலிபான்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.