வெறி பிடித்து மனிதரைக் கடித்துக் குதறிய நாய் சுட்டுக்கொலை... அமெரிக்காவில்!
நியூயார்க்: அமெரிக்காவில் வெறி பிடித்தது போன்று ஒரு ஆணை கடித்துக் குதறிய நாயை அந்த வழியாக பணி முடிந்து சென்ற காவல் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆண்டனி டேவிஸ் என 50 வயது காவல் அதிகாரி ஒருவர் சம்பவத்தன்று, பணி முடிந்து தன் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, தெரு ஒன்றில் வெறி பிடித்த நாயொன்று, ஒருவரைக் கடித்துக் குதறிக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அந்த நாயிடம் இருந்து அந்நபரை மீட்க அவர் போராடினார். ஆனால், நாய் விடுவதாக இல்லை. இதனால் வேறு வழியின்றி அந்நாயின் தலையில் சுட்டு அதனை டேவிஸ் கொன்றார்.
பின்னர் நாயின் பிடியில் இருந்து தப்பிய அந்நபரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் டேவிஸ். இந்த சம்பவத்தில் டேவிஸுக்கும் சிறு காயம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட அந்நபர் அத்தெருவில் வசித்து வருபவர். சுட்டுக் கொல்லப் பட்ட நாயும் அதே பகுதியில் வசிப்பவர் ஒருவரின் நாய் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. நாயின் உரிமையாளரும், பாதிக்கப்பட்ட நபரும் பேசிக்கொண்டே நடந்து சென்ற போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
‘நாயிடம் சிக்கிய மனிதரை மீட்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனாலேயே நாயைச் சுட்டுக் கொல்ல வேண்டியதாயிற்று' என்று டேவிஸ் தெரிவித்துள்ளார்.