மாட்டுக்கு 5 காலா? இந்த தாய்லாந்து கன்றை தொட்டால் அதிர்ஷ்டம் கூரையை பிச்சிக்குமாம்? மக்கள் ஆச்சரியம்
தாய்லாந்து நாட்டின் சுகோத்தாய் (Sukhothai) மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் உலகையே மிரள வைக்கும் ஒரு விசித்திரமான சம்பவம் சமீபத்தில் நடந்தது.. ஒரு விவசாயி தன்னுடைய வீட்டில் பசுமாடு வளர்த்து வருகிறார்.. இந்த பசுவுக்குப் பிறந்த கன்றுக்குட்டி ஒன்று, சாதாரணமாக இல்லாமல் 5 கால்களுடன் பிறந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டதாம்.. இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவி, இன்று அந்த கிராமமே ஒரு சுற்றுலாத் தலம் போல மாறி விட்டதாம்.
விவசாயி வீட்டில் விநோதமான கன்றுக்குட்டி பிறந்துள்ள செய்தியை கேட்டதுமே, இந்த அபூர்வ நிகழ்வைப் பார்த்தவுடன், அக்கம் பக்கத்து கிராம மக்கள் மட்டுமல்லாமல், லாட்டரி விளையாடுபவர்களும் கூட்டம் கூட்டமாக அந்த வீட்டுக்குத் திரண்டு வரத் தொடங்கி விட்டார்கள்.

தாய்லாந்தின் சுகோத்தாய் மாகாணத்தை பொறுத்தவரை, விசித்திரமாக பிறக்கும் விலங்குகளை "அதிர்ஷ்டத்தின் அடையாளம்" என்று மக்கள் நம்புவது வழக்கமாம்.. அப்படித்தான் இந்த விசேஷ கன்றுக்குட்டியால் தங்களுக்கு வரும் லாட்டரியில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிய தொடங்கியுள்ளனர்.
அதிர்ஷ்டம் தருமா கன்றுக்குட்டி?
அங்கே கூடிய மக்கள் அந்தக் கன்றுக்குட்டியை வெறும் வேடிக்கை பார்க்க மட்டும் வரவில்லை. கிராம மக்கள் பலரும் இது போன்ற பிறப்புகள் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்புவதால், அந்தக் கன்றுக்குட்டிக்குச் சிலர் பூஜைகள் செய்தும், சிலர் அதன் உடலைத் தொட்டுப் பார்த்தும் ஆசி பெற்று விட்டு சென்றார்களாம்..
இந்த விசித்திரக் கன்று பிறந்த தேதி மற்றும் அதன் உடலில் உள்ள அடையாளங்களை வைத்து "லக்கி நம்பர்களை" அவர்கள் கணித்தனர்.. தங்களின் தலைவிதியை மாற்றப்போகும் ஒரு ரகசியம் இந்தக் கன்றுக்குட்டியிடம் ஒளிந்துள்ளதாகவும் அம்மக்கள் நம்புகிறார்கள்.
இதெல்லாம் நிஜமா? அறிவியல் சொல்வது என்ன?
ஆனால் இது குறித்துக் கால்நடை நிபுணர்கள் வேறு விதமான விளக்கத்தைத் தருகிறார்கள். அதாவது இது ஒரு அபூர்வமான மரபணு வளர்ச்சி குறைபாடு (Genetic Abnormality) காரணமாக ஏற்படும் விஷயம் என்று அவர்கள் சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, இதற்கு "அதிர்ஷ்டம்" அல்லது "லாட்டரி வெற்றி" போன்றவற்றுடன் எந்தவிதமான அறிவியல் தொடர்பும் இல்லை என்றும் நிபுணர்கள் திட்டவட்டமாக விளக்கம் தந்தள்ளனர்..
இருந்தாலும் சமூக ஊடகங்களில் இந்த வீடியோக்கள் வேகமாகப் பரவியதால், இந்தக் கன்றுக்குட்டியைப் பார்க்க வரும் மக்களின் ஆர்வம் குறையவே இல்லையாம்.. இந்த கன்றுக்குட்டி பிறந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், மீண்டும் இது தொடர்பான வீடியோக்களை சோஷியல்மீடியாவில் பலரும் ஷேர் செய்து வருகிறார்களாம்.
மருத்துவ துறையில், இந்த 5 கால் கன்றுக்குட்டியை Polymelia என்கிறார்கள்.. அதாவது கூடுதல் உறுப்புகள் முளைக்கும் குறைபாடு ஆகும். இப்படித்தான் 2017-ல் விசித்திர கன்றுக்குட்டி ஒன்று இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் பிறந்தது.. மனித முகச் சாயல் அந்த கொண்ட கன்றுக்குட்டியின் கண்கள், மூக்கு மற்றும் வாய் எல்லாம் அச்சு அசல் மனிதனைப் போலவே இருந்ததாம்.
மனித முகத்துடன் கன்றுக்குட்டி
இப்படி மனித முகக் கன்றுக்குட்டியை Cyclopia/Facial Abnormality என்கிறார்கள்.. இது முக எலும்புகள் மற்றும் திசுக்கள் சரியாக வளராததால் ஏற்படும் "ஜெனடிக்" கோளாறு காரணமாக இப்படியான தோற்றம் வருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், இதைப் பார்த்த அந்த ஊர் மக்கள், அது விஷ்ணுவின் அவதாரம் என்று நம்பி, அதற்குப் பெரிய கோயில் கட்டவும் முடிவு செய்தனர். ஆனால், அது பிறந்த ஒரு மணி நேரத்திலேயே இறந்துவிட்டது நினைவிருக்கலாம்.
இப்போது இந்த 5 கால் கன்றுக்குட்டி ஒரு "செலிபிரிட்டி" போல அந்த ஊரையே ஆக்கிரமித்துள்ளது.. இயற்கையின் படைப்பில் எத்தனையோ ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதற்கு இந்த 5 கால் கன்றுக்குட்டியே ஒரு சாட்சி!














Click it and Unblock the Notifications