பாகிஸ்தானில்.. ஆப்கன் தூதரின் மகள் கடத்தல்.. 7 மணி நேரம் கடும் சித்ரவதை.. கொடுமை.. பகீர் தகவல்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு அங்கு தலீபான் பயங்கரவாதிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
நாட்டின் முக்கிய எல்லைகளையும், நகரங்களையும் தலீபான்கள் தங்கள் வசம் கொண்டு வந்து விட்டனர்.
தலீபான்கள் தொடர்ந்து முன்னேறி பல பகுதிகளை கைப்பற்றினாலும் இறுதியில் போரை வெல்லப்போவது நாங்கள்தான் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி உறுதிபட நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீது புகார்
இது ஒரு புறம் இருக்க ஆப்கானிஸ்தானில் நடக்கும் போருக்கு பாகிஸ்தானை பயங்கரமாக குற்றம்சாட்டி இருந்தார் அஷ்ரப் கனி. 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஜிகாதி ஆயுதப் போராளிகள் பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துவிட்டதாகவும், தலீபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்னிலையில் அஷ்ரப் கனி கூறி இருந்தார்.

ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தல்
''ஆப்கானிஸ்தானில் சண்டை நடந்தால் அதனால் அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள்தான். தற்போது நடக்கும் போருக்கு எங்களைக் குறை கூறக் கூடாது'' என்று இம்ரான்கான் அவருக்கு பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கடும் சித்ரவதை
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக இருப்பவர் நஜீப் அலிகில். இவரது மகளான 26 வயதான சில்சிலா அலிகில் ஜின்னா சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். சுமார் 7 மணி நேரம் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்ட அவர் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது நஜீப் அலிகில்.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் கண்டனம்
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் பாகிஸ்தானில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. நஜீப் அலிகில் கடத்தப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications