ஷாக்.. 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே.. சமைத்து உண்ட மனிதன்.. பிரமிப்பில் உறைந்த ஆராய்ச்சியாளர்கள்
இஸ்ரேல்: 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் தனது உணவை சமைத்து உண்டதற்கான ஆதாரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது, தீயில் நேரடியாக உணவை காட்டி அவன் சாப்பிடவில்லை. மாறாக, பக்குவமான சூட்டில் சமைத்து உண்டதற்கான ஆதாரம்தான் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
அப்படியென்றால், 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே சமைத்து உண்ணும் நாகரீகம் அந்த காலத்திலேயே ஆதி மனிதர்களிடம் இருந்திருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தபடி கூறுகிறார்கள்.
'பிராங்க்' அட்டகாசம்.. ஊரையே கலங்கடித்த 'கங்காரு மனிதன்'.. போலீஸில் சிக்கி சின்னாபின்னமான யூடியூபர்
ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு..
உலகிலேயே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்னவென்று கேட்டால் நாம் எதை சொல்வோம். சிலர் கம்ப்யூட்டர் என்பார்கள். சிலர் செல்போன்கள் என்பார்கள். ஆனால், மனித வரலாற்றிலேயே மிக அரிய கண்டுபிடிப்பாக விஞ்ஞானிகள் இன்று வரை கூறுவது நெருப்பை தான். காட்டில் வேட்டையாடி பச்சையாக இறைச்சியையும், கிழங்கு வகைகளை சாப்பிட்டு வந்த ஆதி மனிதன் எதேச்சையாக கண்டுபிடித்ததே நெருப்பு. ஆனால், கண்டுபிடித்ததோடு விட்டுவிடாமல், அதனை பயன்படுத்தி தனது உணவை சுட்டு சாப்பிட்டதுதான் விளைவுதான் இன்றைக்கு நாம் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏன் தெரியுமா? அதுவரை பச்சை இறைச்சியை உண்பதற்கு ஏதுவாக ஆதி மனிதனின் தாடை பெரிதாகவும், தலை சிறிதாகவும் இருந்தது. ஆனால், உணவை நெருப்பில் வாட்டியதால் அவற்றை எளிதாக சாப்பிட முடிந்த காரணத்தாலேயே, அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சியில் மனிதனின் தலை பெரிதாக தொடங்கி மூளை விரிவடைய ஆரம்பித்தது. அதனால்தான் மனிதனால் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க முடிந்தது. ஒருவேளை, நெருப்பு கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று வரை நாம் ஆதிவாசிகளாக காட்டில் தான் வாழ்ந்திருப்போம்.
15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே..
ஆதி மனிதன் எந்தக் காலக்கட்டத்தில் தனது உணவை நெருப்பில் வாட்டி சாப்பிட தொடங்கினான் என பல ஆண்டுகாலமாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. அப்போதுதான், ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு இடத்தில் சில விலங்குகளின் எலும்புகள் கிடைத்தன. இதனை ஆராய்ச்சி செய்த போது, அந்த எலும்புகள் 15 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்பதும், அவை நெருப்பில் வாட்டப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி, 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் உணவை நெருப்பில் வாட்டி உண்ண தொடங்கியது தெரியவந்தது. மனித இனம் தொடர்பான ஆராய்ச்சியில் இது ஒரு மிகப்பெரிய மைல் கல்லாக இருந்து வந்தது.
சமைத்து உண்ட ஆதாரம்..
இந்த நிலையில்தான், இஸ்ரேலின் 'டெட் ஸீ' (Dead Sea) எனப்படும் உப்புக் கடலை சுற்றியுள்ள பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியில் அதிர்ச்சிகர உண்மை தெரியவந்தது. அதாவது, இந்த பிராந்தியத்தில் உள்ள கலீலி எனும் நதிக்கு அருகே நடந்த அகழ்வாராய்ச்சியில் ஒரு பெரிய மீனின் எலும்புகளும், அதன் சில பற்களும் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை ஆராய்ச்சி செய்த போது ஆராய்ச்சியாளர்கள் உண்மையில் அதிர்ச்சியில் பிரமித்துப் போய்விட்டனர். ஏனெனில், சுமார் 7.80 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அந்த மீன், சமைத்து உண்ணப்பட்டிருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
ஆராய்ச்சியாளர்கள் ஷாக்..
இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் ஜென்ஸ் நஜோர்கா கூறுகையில், "ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிறகு, ஆதிமனிதர்கள் அனைவருமே தங்கள் உணவை நெருப்பில் சுட்டு சாப்பிட்டார்கள் என்றுதான் இதுவரை நினைத்து வந்தோம். நாகரீக வளர்ச்சி அடைந்த பின்னரே, மனிதர்கள் உணவை சமைத்து உண்டார்கள் என ஆய்வுகள் தெரிவித்தன. ஆனால், இந்த ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதர்கள் உணவை சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள். அதுவும், அந்த மீன் நெருப்பில் நேரடியாக காட்டப்படவில்லை. பாத்திரத்தை போன்று எதையோ ஒன்றை வைத்து, அது கல்லாக கூட இருக்கலாம். அதன் மீது மீனை வைத்து பதமான சூட்டில் அதை ஆதிமனிதர்கள் சமைத்திருக்கிறார்கள். மனித இனத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு 7 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதிமனிதன் சமைத்து உண்டதுதான் காரணம் என அறுதியிட்டு சொல்லலாம்" என்றார்.