பதவி ஏற்கும் முன்னரே, ஆயிரம் பேர் வேலையைக் காப்பாற்றிய ட்ரம்ப்!
இண்டியானாபோலிஸ்(யு.எஸ்): அமெரிக்காவிலிருந்து மெக்சிகோவுக்கு செல்ல இருந்த 1000 வேலைகளை, தடுத்து நிறுத்தி அமெரிக்கர்களுக்கு கிடைக்கச் செய்துள்ளார் ட்ரம்ப்.
இண்டியானா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையை மெக்சிகோவுக்கு மாற்றப்போவதாக கேரியர் ஏர்கண்டிஷனிங் நிறுவனம் அறிவித்தது. அதனால் அங்கு வேலைப் பார்க்கும் 1400 பேர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டது.
"அமெரிக்கர்களின் வேலைகள் மெக்சிகோவுக்கோ, சீனாவுக்கோ செல்ல அனுமதிக்க மாட்டேன். அங்கு சென்றுள்ள வேலைகளை அமெரிக்காவுக்கு திரும்பவும் கொண்டு வருவேன்.
மீண்டும் அமெரிக்காவில் உற்பத்தி நிறுவனங்களை உயிர்த்தெழச் செய்வேன்," என்று தேர்தலில் ட்ரம்ப் வாக்குறுதி அளித்து இருந்தார்.
இந் நிலையில், அவர் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே, அமெரிக்காவை விட்டு மெக்சிகோ செல்லப்போகிறோம் என்று கேரியர் நிறுவனம் சொன்னது, ட்ரம்புக்கு பெரிய மானப் பிரச்சனையாகவும் மாறிவிட்டது.
ட்ரம்புடன் வெற்றி பெற்ற துணை அதிபர் மைக் பென்ஸ்தான், தற்போதைய கவர்னரும் ஆவார். அவருடைய நிர்வாகத்திலேயே அங்குள்ள நிறுவனம் மெக்சிகோ போவது என்பது அவருக்கு கூடுதல் சங்கடத்தைக் கொடுத்தது.
இருவரும் நிறுவனத்துடன் பேசி ஒரு ஒப்பந்த உடன்படிக்கை செய்து கொண்டனர். அதன் படி அடுத்த பத்தாண்டுகளில் இண்டியானா மாநில அரசு கேரியர் நிறுவனத்திற்கு 7 மில்லியன் டாலர்கள் வரிவிலக்கு, ஊக்கத்தொகை உள்ளிட்ட மானியங்கள் வழங்க உள்ளது.
1000 வேலைகள் இண்டியானாவில் இருக்கும் வகையில் தொழிற்சாலையை அங்கேயே தொடர்ந்து நடத்த கேரியர் நிறுவனம் சம்மதித்துள்ளது.
தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த சமரச முயற்சிக்கு எதிர்ப்புக் குரல்களும் கேட்கின்றன.
சாண்டர்ஸ் கடும் எதிர்ப்பு
ஜனநாயகக் கட்சியின் பெர்னி சான்டர்ஸ் கடுமையான ஆட்சேபணை தெரிவித்துள்ளார். நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்ன ட்ரம்ப், தற்போது நேர் எதிர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அமெரிக்கத் தொழிலாளர்களின் வேலைகளைக் காரணம் காட்டி, ட்ரம்பை அந்த நிறுவனத்திடம் மண்டியிடச் செய்து விட்டார்கள்.
35% சதவீதம் வரிவிதிப்பேன் என்றவர் நிறுவனத்திற்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ளார்.
நிறுவனங்கள்தான் லாபம் அடையுமே ஒழிய தொழிலாளர்களுக்கு நன்மை இல்லை என்று ட்ரம்புக்கு எதிராக சான்டர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
பொருளாதார வல்லுனர்கள், ட்ரம்பின் இந்த செயல்பாடு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது. நிறுவனங்கள் இனி, வெளி நாடு செல்லப்போகிறோம் என்று அரசை மிரட்டி சாதிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
எது எப்படியானாலும், 1000 குடும்பங்களின் வருமானத்தை பாதுகாத்த ஏழைப் பங்காளன் என்று பெயர் பெற்று விட்டார். அதிபராகப் பதவி ஏற்பதற்கு முன்னரே, தொழிலாளர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.
-இர தினகர்