ட்விட்டரை தடை செய்தது துருக்கி!
இஸ்தான்புல்: துருக்கி நாட்டில் அந்நாட்டு பிரதமர் ஏரோகானின் ஊழல்களை அம்பலப்படுத்தியதால் சமூக வலைதளமான ட்விட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
துருக்கி பிரதமர் ஏரோகான் வியாழக்கி நள்ளிரவு சமூக வலைதளமான ட்விட்டரை நாடு முழுவதும் தடை செய்வதாக அறிவித்தார். அதன் பின்னர் ட்விட்டரின் செயல்பாடுகள் படிப்படியாக அந்நாடு முழுவதும் துண்டிக்கபட்டன.
துருக்கி பிரதமரின் ஊழல் தொடர்பான சில இணைப்புகளை ட்விட்டர் தளம் நீக்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை நிறைவேற்றாததாலேயே ட்விட்டர் மீது தடை விதிக்கப்படுவதாக துருக்கி அரசு அறிவித்தது.
இருப்பினும் ட்விட்டரை வேறு எந்த வகையில் அணுக முடியும் என்பதற்கான வழிமுறை எஸ்.எம்.எஸ். மூலம் ட்விட்டர் நிறுவனம் அனுப்பியும் வருகிறது. ஆனாலும் அந்த வழிமுறைகளிலும் ட்விட்டரை அணுக முடியவில்லை என்று கூறுகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஃபேஸ்புக் மற்றும் யூ டியூப் போன்றவற்றையும் தடை செய்யப் போவதாக துருக்கி அரசு தெரிவித்திருந்தது. தற்போது ட்விட்டரை தடை செய்திருப்பதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.