இதய நோய் வருமா, வராதா?: துல்லியமாக கணிக்கும் ட்விட்டர்
நியூயார்க்: உலகில் அதிகமான மக்கள் இறக்க காரணமான இதய நோய் எத்தனை பேருக்கு வருகிறது என்பதை ட்விட்டர் துல்லியமாக கணிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ட்விட்டர் பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் மக்களுக்கு இதய நோய் ஏற்படுவதை ட்விட்டர் துல்லியமாக கணிப்பது தெரிய வந்துள்ளது.
குறைவான வருமானம், பரம்பரை, புகைப்பிடித்தல், மன அழுத்தம் உள்ளிட்டவற்றால் இதய நோய் ஏற்படுகிறது என்று இதுவரை செய்துள்ள ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. உலகில் பலர் இறக்க காரணமாக இதய நோய் உள்ளது.
இந்நிலையில் ட்விட்டரில் மக்கள் கோபம், மன அழுத்தம், அசதி உள்ளிட்டவை குறித்து கருத்து தெரிவித்திருப்பதை வைத்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 2009ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை செய்யப்பட்ட ட்வீட்களை அவர்கள் ஆய்வு செய்தனர். கோபம், வெறுப்பு, அதிருப்தி தொடர்புடைய வார்த்தைகளுக்கும் இதய நோய்க்கும் தொடர்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதே சமயம் மகிழ்ச்சியாக ட்வீட் செய்பவர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளது. அமெரிக்காவில் உள்ளவர்கள் செய்த ட்வீட்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் அமெரிக்கா வாழ் இந்தியர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.