விமானம் மாயமானதற்கு விமானிகள் தான் காரணம்: அமெரிக்கா நம்பிக்கை
கோலாலம்பூர்: மலேசிய விமானம் மாயமாகியுள்ளதற்கு விமானிகள் தான் காரணமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனா தலைநகர் பெய்ஜிங்கிற்கு கடந்த சனிக்கிழமை கிளம்பிய விமானம் மாயமானது. விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று மலேசியா கூறி வருகின்றபோதிலும் அது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
விமானத்தில் பயணித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சீனர்கள் என்பதால் விவரம் தெரியாமல் சீன அரசும் தவித்து வருகிறது. இந்நிலையில் விமானம் மாயமானதற்கு விமானிகள் தான் காரணம் என்று அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக விமானத்தின் கேப்டன் மற்றும் துணை விமானி ஆகியோரின் வீடுகளில் நேற்று மலேசிய அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே விமானத்தை தேடும் பணியில் மேலும் 11 நாடுகள் ஈடுபட்டுள்ளன.