கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் புதிய கட்டுப்பாடுகள்.. ஐக்கிய அமீரகம் தகவல்
யுஏசி: கொரோனா தடுப்பூசி போடப்படாத நபர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்று ஐக்கிய அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து நாடுகளும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஐக்கிய அமீரகத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சர்வதேச அளவில் அதிவிரைவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்ட நாடாக ஐக்கிய அமீரகம் உள்ளது. அங்கு 16 வயதைக் கடந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. 90 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட, அங்கு 65% மக்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அமீரகத்திலும் குறிப்பிடச் சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களது தயக்கம் அவர்களின் குடும்பத்தையும், சமூகத்தையும் அபாயத்தில் தள்ளுவதாகவும் எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு நுழையத் தடை உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,903 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தற்போது பொதுவெளியில் மாஸ்க்குகளும், தனிமனித இடைவெளியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.