அபுதாபியில் அமெரிக்க ஆசிரியையை கொன்ற பெண் 48 மணி நேரத்தில் கைது: தீவிரவாதி!
அபுதாபி: அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மாலில் அமெரிக்க ஆசிரியையை கத்தியால் குத்திக் கொன்ற பர்தா அணிந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் இபோல்யா ரயன்(37). விவாகரத்தான அவர் கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள புட்பிரிண்ட்ஸ் ரெக்ரூட்டிங் என்ற ஆசிரியைகளை பணியமர்த்தும் நிறுவனம் மூலம் அபுதாபி வந்துள்ளார். அபுதாபியில் உள்ள பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளார். இபோல்யா தனது 11 வயது இரட்டை ஆண் குழந்தைகளுடன் அபுதாபியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த திங்கிட்கிழமை பவ்டிக் மாலுக்கு சென்ற இடத்தில் அவருக்கும் பர்தா அணிந்த பெண்ணுக்கும் இடையே கழிவறையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அந்த பர்தா அணிந்த பெண் இபோல்யாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார். படுகாயம் அடைந்த இபோல்யா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
அபுதாபி போலீசார் கொலை நடந்த 24 மணிநேரத்திற்குள் குற்றவாளியை அடையாளம் கண்டனர். மேலும் சம்பவம் நடந்த 48 மணிநேரத்திற்குள் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். பெரிய வில்லாவில் இருந்த அந்த 38 வயது பெண் கைது செய்யப்பட்டதோடு அவரது வீட்டில் இருந்த வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதான பெண் அமீரகத்தைச் சேர்ந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் இபோல்யாவை கொன்ற பிறகு ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் கழித்து கார்னிச் பகுதியில் உள்ள அலி அன்ட் சன்ஸ் கட்டிடத்தில் வசிக்கும் 46 வயது எகிப்து-அமெரிக்க டாக்டரின் வீட்டு வாசலில் வெடிகுண்டை வைத்துள்ளார். டாக்டரின் மகன் மாலை நேர தொழுகைக்கு மசூதிக்கு செல்கையில் வாசலில் வெடிகுண்டு இருந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து அந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்தனர்.
இந்நிலையில் உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட சிசிடிவி வீடியோவில் அந்த பெண் செய்த குற்றங்கள் பதிவாகியுள்ளன. அவர் பர்தா அணிந்து மாலுக்குள் நுழைவது, கொலை செய்த பிறகு தப்பித்து ஓடுவது கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் பிறகு அவர் கருப்பு நிற பெட்டியை இழுத்துக் கொண்டு டாக்டரின் வீட்டுக்கு செல்வது, அதே பெட்டியுடன் அங்கிருந்து வெளியே வந்து காரில் செல்வது, காரில் உள்ள நம்பர் பிளேட்டை அமீரக கொடியால் மறைத்தது உள்ளிட்டவையும் கேமராவில் பதிவாகியுள்ளன.
அந்த வீடியோவில் போலீசார் மேற்கொண்ட விசாரணை முறையும், குற்றவாளியை அவரது வீட்டில் வைத்து கைது செய்ததும் காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் அப்பெண்ணின் கார் சக்கரத்தில் ரத்தக் கறை இருப்பது, கருப்பு நிற பெட்டி, நான்கு வகையான கத்திகள், பெட்ரோல் கேன்கள், தீப்பெட்டி மற்றும் குண்டு தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் காண்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கை தீவிரவாத வழக்காக கருதி போலீசார் விசாரித்து வருகிறார்கள். அந்த பெண்ணுக்கு இபோல்யா மற்றும் டாக்டருடன் எந்தவித முன்விரோதமும் இல்லை. அவர்கள் அமெரிக்கர்கள் என்பதாலேயே இவ்வாறு செய்துள்ளார். அந்த பெண்ணுக்கும் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் அமெரிக்க ஆசிரியர்களை கொல்லப் போவதாக ஜிஹாதிகள் இணையதளத்தில் செய்தி வெளியானதை பார்த்த அமெரிக்க தூதரகம் தனது நாட்டு குடிமக்களை எச்சரித்திருந்த நிலையில் இந்த கொலை நடந்துள்ளது.