சமைக்க ஆள் கிடைக்காமல் கண்ணீர் விடும் 'கிச்சன்'கள்.. கவலையில் லண்டன் இந்திய ஹோட்டல்கள்
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள பல்வேறு இந்திய ஹோட்டல்களில், இந்திய வகை உணவுகளை சமைக்க ஆள் இல்லாமல் ஹோட்டல்கள் பெரும் தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றன.
இதே நிலை நீடித்தால் நூற்றுக்கணக்கான ஹோட்டல்களை மூட வேண்டி வரும் நிலை ஏற்பட்டுள்ளதாம். இந்த நிலையைத் தடுக்க குறைந்த கால விசாவில் இந்தியாவிலிருந்து சமையல் கலைஞர்களை வரவழைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு இந்திய ஹோட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் கோரிக்கை அனுப்பவும் அவர்கள் தயாராகி வருகின்றனர். விரைவில் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கையை வைக்கப் போகிறார்களாம்.
சரியான குக் இல்லை
இங்கிலாந்தில் உள்ள 90 சதவீத இந்திய ஹோட்டல்களில் சரியான சமையல் கலைஞர்கள் இல்லையாம். திறமையா்ன சமையல் கலைஞர்கள் இல்லாததால் திண்டாட்டமாகியுள்ளதாம்.
பிரதமரை நேரில் சந்திக்க முடிவு
இதுகுறித்து இனாம் அலி (இவர்தான் 10 வருடங்களுக்கு முன்பு பிரிட்டிஷ் கர்ரி விருதை நிர்மானித்தவர்) கூறுகையில் இதுதொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்
மேலும் அவர் கூறுகையில், தற்போதைய நிலை நீடித்தால் இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான இந்திய ஹோட்டல்களை மூடும் அபாயம் உள்ளது. இந்த நிலையைத் தவிர்க்க இங்கிலாந்து அரசு உதவ முன்வர வேண்டும்.
பயிற்சி தர 3 வருஷமாகும்
தற்போது புதிதாக ஆட்களை எடுத்தாலும் கூட அவர்களுக்குப் பயிற்சி தந்து, அவர்கள் திறமையானவர்களாக மாறுவதற்கு 3 வருடமாகும். ஆனால் எங்களுக்கு வேறு வழி இல்லை.
உதவுங்கள்
இந்த நேரத்தில் ஹோட்டல் துறையைக் காப்பாற்ற அரசு உதவ வேண்டும். குடியேற்றச் சட்டங்களை சற்றுத் தளர்த்தி குறுகிய கால விசாவில் இந்தியாவிலிருந்து சமையல்கலைஞர்களை அழைத்து வர அரசு அனுமதிக்க வேண்டும். தற்காலிக அனுமதியாவது தரலாம்.
டேவிட் மீது நம்பிக்கை
பிரதமர் டேவிட் கேமரூன் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவர் உதவுவார் என நம்புகிறோம். அவரை சந்தித்து இதுதொடர்பாக மனு கொடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். விரைவில் சந்திப்போம் என்றார்.
1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
இங்கிலாந்தில் உள்ள இந்திய ஹோட்டல்கள் கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருகின்றன. மேலும் வருடத்திற்கு 4.2 பில்லின் பவுண்டு அளவுக்கு வருமானத்தையும் ஈட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.